Friday 18 April 2008
மக்கள் கொடுத்த நாற்காலியும் விக்ரமின் பதில் மரியாதையும்!
சென்னை: நடிகர் விக்ரம் தனது பிறந்த நாளையொட்டி, நேற்று காலை தன்னுடையக் கண்களை தானம் செய்தார். தன் ரசிக கண்மணிகள் ஆயிரம் பேரையும் கண்தானம் செய்யவைத்தார். மாலையில் ரசிகர்களுடன் நடந்த விழாவில், ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை விக்ரம் வழங்கினார். தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் இதுபோன்ற நற்காரியங்களை செய்வேன் என்றும் அறிவித்தார் விக்ரம்.
நடிகர் விக்ரம், நேற்று காலை தனது பிறந்நாளை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் மத்தியில் கொண்டாடினார். தனது பிறந்த நாள் செய்தியாக அவர் கூறியதாவது :
”ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் இந்த சமூகத்திற்கு பயன்படுகிற மாதிரி ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பேன். அதற்கான சந்தர்ப்பம் இப்போது வந்து இருக்கிறது.
நான், ‘காசி’ படத்தில் பார்வையற்றவனாக நடித்தபோது, பார்வையின்மையின் கொடுமையை உணர முடிந்தது. கண் பார்வையற்றவர்கள், வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்? என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தேன். பார்வையில்லாமல் நடிப்பதே இவ்வளவு கஷ்டம் என்றால், வாழ்வது எவ்வளவு கஷ்டம?
அப்போதுதான் எனக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்ச்சி வந்தது. தானத்தில் சிறந்தது, கண்தானம் என்பார்கள். என் பிறந்த நாளில் நானும், என் ரசிகர்கள் ஆயிரம் பேரும் கண் தானம் செய்ய முடிவெடுத்தோம். இதுபற்றி என் குடும்பத்தினருடன் நான் கலந்து பேசியபோது, என் மகள் ‘அப்பா, நானும் கண் தானம் செய்ய விரும்புகிறேன்’ என்றாள்.
இந்த சமுதாயம் எனக்கு ஒரு உயரமான நாற்காலியைக் கொடுத்து பெருமை சேர்த்திருக்கிறது. அதற்கு நான் ஏதாவது பதில் மரியாதை செய்ய வேண்டும். ‘விக்ரம் பவுண்டேஷன்’ என்ற அமைப்பை நிறுவி, அதன் மூலம் சமுதாய பணிகள் செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். கண் தானத்தில் தொடங்கும் இதன் பாதையும், பயணமும் நீளமானது’ ‘என்று உணர்ச்சிப்பொங்க பேசினார்.
அதன்பின்னர் விக்ரம், 1,000 ரசிகர்களுடன் கண் தானம் செய்ததற்கான பத்திரங்களை ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி பேராசிரியர்கள் டாக்டர் விஸ்வநாதன், டாக்டர் கல்பனா, பொது மேலாளர் எஸ்.ஸ்ரீகுமார் ஆகியோரிடம் வழங்கினார்.
விக்ரம், மேலும் கூறுகையில்,
”சமுதாயத்துக்கு கண் தானம் செய்ததுபோல், என்னை உயரத்தில் ஏற்றி வைத்துள்ள ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய விரும்பினேன். யோசித்து போது கிடைத்த திட்டம் இணைய தளம்.
என் ரசிகர்களுக்கு இணைய தளம் தொடங்கி, அதை இன்று முதல் அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன். எது மாதிரியும் இல்லாத புதுமாதிரியான பல அம்சங்கள், இந்த இணைய தளத்தில் உண்டு. என்னைப் பற்றிய விவரங்கள், நான் நடித்த நடிக்கும் பட தகவல்கள், எதிலும் வராத அரிய புகைப்படங்கள், அன்றாடம் நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் போன்ற பலவும் இருக்கும்’ எனத் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள லிட்டில் பிளவர் கான்வென்டில் படிக்கும் கண் பார்வையற்ற - காது கேட்காத மாணவ, மாணவிகளுக்கு மதியம் பிரியாணி விருந்தளித்த விக்ரம் மாலை 4 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர வண்டிகள், 10 பேர்களுக்கு தையல் இயந்திரங்கள், ஏழை மாணவ மாணவிகளுக்கு படிக்க உதவி, சீருடைகள் உதவி ஆகிய உதவிகளை வழங்கினார்.









































