2008/10/10 Lena Katturai

Posted on Friday 10 October 2008

lena-tamilvanan.jpgஅறிவுரைகளை அசட்டை செய்யும் மனது!

நமக்கு எந்த நபர்களைப் பிடிப்பது இல்லையோ, அந்த நபர்களின் அறிவுரைகளும் பிடிக்காமல் போவது பெரிய துரதிருஷ்டம். இவர்கள் அமிழ்தமும் வேப்பஞ்சாறாய்க் கசப்பது நம் அசட்டை செய்யும் குணத்தால் வந்ததுதான்.

யார் சொல்கிறார்கள் என்கிற அடிப்படையைவிட என்ன சொல்கிறார்கள் எனபதே முக்கியம்!

நம் சிறுவயதுக் குணம் இன்னுமா தொடர வேண்டும்? இன்னார் சொன்னால் அப்படியே கேட்பது; இன்னார் சொன்னால் அடியோடு மறுப்பது என்கிற இந்தக் குணம் பக்குவ வயதிலும் தொடர்வது எவ்வளவு பேதமை!

நாம் சிந்திக்காத கோணம் இவர் சொல்வதில் இருக்கிறது. நாம் பார்க்க மறந்த பார்வை இதில் ஒளிந்திருக்கிறது என்றெண்ணுவது புத்திசாலித்தனமா, இவன் வேண்டாதவன். எனவே, இவன் சொல்வதெல்லாம் நம் கெடுதலுக்கே என்று வாதப் பிரதிவாதிகளைச் செய்யாமலேயே தீர்ப்பு எழுதுவது புத்திசாலித்தனமா?

நான் எனும் அகந்தையும் ஒரு மனிதனைப் பிறர் சொல்வதைப் புறக்கணித்து மகிழ்கிறது. எனக்குத் தெரியாததையா இவன் சொல்ல வந்துவிட்டான்? இவன் தகுதி என்ன? என் தகுதி என்ன? என்று நபர்களின் அடிப்படையில் ஒன்றை எடை போடுவதை நிறுத்திவிட்டு, கருத்தின், கோணத்தின் அடிப்படையில் மதிப்பீடுகளை அமைப்பது நல்லது.

இவன் சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்தால் இவனுக்கல்லவா பெருமைகள் போய்விடும்? நற் பெயரை இவனல்லவா தட்டிச் சென்றுவிடுவான் என்று எண்ணுவதைவிட, நன்மை நமக்கு; பெயர் அவனுக்கு! இருந்துவிட்டுப் போகட்டுமே என்கிற கோணத்திலும் பிறர் கருத்துக்குச் செவி சாய்ப்பதும், தராசிலிட்டு ஏற்பதும் புத்திசாலித்தனம்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/10/03 நம் கொழுப்பை நாம் அறிவது எப்படி?

2008/09/26 மகிழ்வை மட்டும் தேடும் மனமே!

2008/09/19 நாமே நீதிபதிகளாவதா?

2008/09/12 சார்ந்தே இருக்கும் இயல்பால் வரும் சங்கடங்கள்

2008/09/05 சகிப்புத் தன்மை தரும் செளகரியங்கள்!

2008/08/29 உணவால் வாழ்பவர்களும் உணர்வால் வாழ்பவர்களும்!

2008/08/22 இரண்டையும் சொல்லி வைப்போம்!

2008/08/15 மனச் சிம்மாசனங்கள்!

2008/08/08 கண்டு கொள்ளாமல் விடப்பட்ட களங்கள்!

2008/08/01 வார்த்தைகளை விழுங்கவேண்டிய தருணங்கள்!

2008/07/25 நம் அலட்சியங்களின் விலைகள் ?

2008/07/18 பாடாய்ப் படுத்தும் மனிதர்களால் உருவாகும் நன்மை!

2008/07/11 சின்னஞ்சிறு ஓட்டைகளையும் அடைப்போம்!

2008/07/04 உங்கள் உணவுக் கொள்கை என்ன?

2008/06/27 அரியாசனம் எதற்கு? சரியாசனம் இருக்கு!

2008/06/20 வலியின்றி வசந்தம் வருமா?

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 5:44 am
Filed under: Uncategorized
2008/06/20 Lena Katturai

Posted on Thursday 19 June 2008

lena2.jpgவலியின்றி வசந்தம் வருமா?

செளகரியங்களை, சுகங்களை அனுபவிக்கிறவர்களைப் பார்த்து வயிறு எரிகிறவர்கள் உண்டு. ஏக்கப்படுகிறவர்கள் உண்டு. ஆனால், இவற்றிற்குப் பின்னால் உள்ள வலிகள்; முயற்சிகள்; போராட்டங்களை எண்ணிப் பார்ப்பவர்கள் எத்துணைப் பேர்?

இப்படிப் பொறாமைப்படுகிறவர்கள், இருக்கிற தங்களின் கொஞ்ச நஞ்ச மகிழ்வையும் கெடுத்துக் கொள்வதோடு உடல்நலத்தையும் கூட மோசமாக்கிக் கொள்கிறார்கள். ஏக்கப்படுகிறவர்களையாவது கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். காரணம், இந்த ஏக்கம் நாமும் இவற்றை அடைய வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் எடுத்த எடுப்பிலேயே செளகரியத்தை, சுகத்தை அனுபவிக்கிறவர்களை ஊக்க சக்திகளாக எடுத்துக் கொள்கிறவர்கள்தாம் பாராட்டுக்குரியவர்கள். இந்த உணர்வை அழுத்தமாகப் பதித்தால், திரும்பத் திரும்ப எண்ணினால், யாரைப் பார்த்து வியந்தார்களோ அவர்களைவிட உயர்ந்துவிட வாய்ப்பு உண்டு.

தந்தையை மிஞ்சிய தனயன்கள்; குருவை மிஞ்சும் சிஷ்யர்கள் என்று கேள்விப்படுகிறோமே, பார்க்கிறோமே, இவர்களின் உருவாக்கங்கள் வேறு எப்படி நடந்தன என்கிறீர்கள்? ‘என்கிட்டதான் வேலை பார்த்தான்; இப்பத் தனியா தொழில் செஞ்சு என்னைவிட வளர்ந்துட்டான்’ என்று எத்துணையோ முதலாளிகள் சொல்ல நேரிடுகிறதே, இந்த அதிசயம் நிகழ்ந்தது இப்படித்தான்.

ஆனால் வெறுமனே வியந்தால் போதுமா? உயிரைக் கொடுப்பதற்கிணையான முயற்சி வேண்டாமா?

அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்க்க வேண்டுமா? முழங்கால் கெஞ்சும்படியாக உயரம் ஏறத்தான் வேண்டும். கோப்பைகள் தேவையா? மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடத்தான் வேண்டும்.

எந்த ஒன்றும் விலை கொடுக்காமல் இலவசமாகக் கிடைப்பதில்லை.

உலகம் எனும் பல்பொருள் அங்காடியில் எதுவும் சுலபமாகக் கிடைத்துவிடாது. உழைப்பு, முயற்சி எனும் நோட்டும் சில்லறையும் தேவை.

இன்னுமொன்றும் உறுதி.

வலியில்லாமல் பெறுகிற வசந்தம் நிலைப்பதே இல்லை!

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!

2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 11:13 pm
Filed under: Uncategorized
2008/06/06 Junior Kelvi Pathil

Posted on Friday 6 June 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

டி.ஜாபர்ஹுசேன், சென்னை.

உங்கள் ஊர்ப் பெருமை என்று எதைச் சொல்வீர்கள்?

பிறந்த ஊரைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? மதுரை மீனாட்சி கோயில் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் ஒரு பகுதி மொட்டைக் கோபுரமாய் நின்று போனது. இதைக்கட்டி முடிக்க முயன்றவர்களின் குடும்பத்திற்கெல்லாம் கடுமையான சோதனை ஏற்பட்டது. எனவே, பலரும் இதில் கை வைக்கத் தயங்கினர். அப்போது எங்கள் (தேவகோட்டை) ஊரைச் சேர்ந்த வயிநாகரம் குடும்பம்தான் பெரும் பொருட்செலவைப் பொருட்படுத்தாமலும், வரப்போகும் சோதனைகளைப் பற்றி கவலை கொள்ளாமலும் மொட்டைக் கோபுரத்தை முழுக் கோபுரமாய் ஆக்கி முடிந்தது. இன்றும் இக்குடும்பத்தின் ஒரு பிரிவினர் கடுமையான சோதனைகளைச் சந்தித்து வருகிறார்கள்.


அ.நாராயணன், ஆம்பூர்.

‘நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று எண்ணுபவர்கள் யார்?

காலையில் நம் தெருவிற்கு அடுத்த தெருவில் வாக்கிங் போகிறார்களே அவர்களும், ஆங்காங்கே உடற்பயிற்சிக் கூடங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்களே அவர்களும்தான் இப்படி நினைக்கிறார்கள். மற்றவர்களெல்லாம் இப்படி நினைக்கவே யோசிக்கிறார்கள்.


எஸ்.சிதம்பரம், மன்னார்குடி.

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிலை?

பா.ம.க.விற்குப் புலிவால் பிடித்த நிலை, காங்கிரசுக்குக் கறிவேப்பிலை நிலை; கம்யூனிஸ்டுகளுக்குச் சம்பிரதாய நிலை; உதிரிகளுக்குச் சங்கோஜ நிலை என்று இப்படியாகப் பல நிலைகள்.


வி.சீனிவாசன், பன்ருட்டி.

சேமிப்பு என்பது இந்தக் காலத்தில் முடியவில்லையே?

தேனீக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்! தேனீக்கள் சில சமயம் ஒரு சொட்டு தேனைச் சேகரிக்கப் பதினைந்து பதினாறு மைல்கள் கூடப் போகுமாம். சேமிப்பு என்றால் நாமும் பறக்கத்தான் வேண்டும். மூலையிலேயே முடங்கிக் கிடந்தால்?


எம்.செழியன், நாகப்பட்டினம்.

தியாகராஜ பாகவதர் மனைவிக்கு இலட்ச ரூபாய் கொடுத்திருப்பதை வரவேற்கலாம் அல்லவா?

நிச்சயமாகப் பாராட்டலாம். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பே இவரது வறுமை தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது தேடப்பட்டதும் ஒரு தற்காலிகத் தீர்வே. இன்றும் அதுதான் நடந்திருக்கிறது. இது தீர்வாகாது. பசித்தவனுக்கு மீன் மட்டும் தரலாகாது. தூண்டிலும் தேவை. தியாகராஜ பாகவதரின் வாரிசு ஒருவருக்கு அரசு வேலை தரலாம். அல்லது ஒரு பெரிய தொகையை நிதியாகப் போட்டு அதன் வட்டியை மாதாந்திரச் செலவினமாகத் தரலாம். பாகவதரின் மனைவிக்கு ஆகும் மருத்துவச் செலவை அரசே ஏற்கலாம். என் வருத்தமெல்லாம் இவ்வளவையும் வேடிக்கை பார்க்கும் நடிகர் சங்கம் பாகவதர் குடும்பத்திற்கு என்ன செய்து கிழித்தது என்பதுதான்!


ஏ.சொக்கலிங்கம், ஊரப்பாக்கம்.

கிரீன்விச் நேரத்தைக் கணக்கிடுவது எப்படி?

உங்களுக்கு மட்டும் ஒரு பார்முலா சொல்லித் தருகிறேன். யாருக்கும் அதைச் சொல்லாதீர்கள்! நேரம் காட்டும் கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொண்டு இந்தியாவில் அதைக் தலைகீழாகப் பிடித்தால், இப்போது உங்களுக்கு கிரீன்விச் நேரம் கிடைக்கும்.


ஆர்.கண்ணன், சென்னை.

வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அணுகுமுறை எப்படியிருக்கும்?

குஜராத், இமாசலப்பிரதேசத் தேர்தல்களையடுத்து இந்தக் காற்றாலை இப்போது பாரதிய ஜனதா பக்கம் திரும்பியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் நாளிருக்கிறது. கடைசிக் காற்றை வைத்துத்தான் ஒரு காற்றாலையின் போக்கைச் சொல்ல முடியும்!


எஸ்.ஜெயக்குமார், விழுப்புரம்.

மருத்துவர் ராமதாசின் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

மருத்துவர் ராமதாசின் சு(ட்)டல்களில் ஒருவித நியாயம் இருப்பதைக் காண்கிறேன். வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று இல்லாமல் இவர் செய்யும் விமர்சனங்களில் தாக்கம் இருக்கிறது. சமூக அக்கறையும் புதைந்து கிடக்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்றால் ஜால்ரா போட வேண்டும் என்கிற அரசியல் நியதியை மாற்றி, குறைகளையும் சுட்டிக் காட்டி நல்லாட்சிக்கு வழி வகுக்கும் அக்கறை எழுகிறது. ராமதாசிடம் உள்ள ஒரே குறை, முதல்வர் உங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும்போது, ஏன் தனிப்பட்ட முறையில் சுட்டிக் காட்டக்கூடாது. நேரடியாக ஏன் மக்கள் மன்றத்தின் முன் கேள்வி எழுப்ப வேண்டும். உங்கள் நோக்கம் விளம்பரத் தன்மை உடையதா என்ன?


டி.தணிகாசலம், சென்னை-17.

இப்போது யார் யாரோவெல்லாம் கட்சி ஆரம்பிக்கிறார்களே?

யார் யாரோவெல்லாம் இல்லை. வலை வீசத் தெரிந்தவர்கள் மட்டுமே இப்போது கட்சி ஆரம்பிக்கிறார்கள்.


பி.சண்முகராஜன், திருத்தணி.

அ.தி.மு.க. மாணவர் அணியினர் தமிழகமெங்கும் மாணவர்களுக்கு இலவச ஆங்கில அகராதிகள் கொடுத்து வருவது பற்றி?

ஆட்சியில் இருந்தபோது பள்ளிக்குப் போக இலவச சைக்கிள்கள்! ஆட்சியில் இல்லாத போது போன இடத்தில் சந்தேகம் வராமலிருக்க இலவச அகராதிகள்! மாணவர்களை இவர்கள் வளைக்கிற சென்டிமென்ட்டே சென்டிமென்ட்!


எம்.மோகன், அயனாவரம்.

வெளிநாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து பெண்களை விற்கிறார்களாமே?

பண்டைத் தமிழனோ, பெண்களுக்குப் பசலை நோய் வருமளவிற்கு வெளியில் போய் பிழைக்கலானான். இன்றையத் தமிழனோ, பசை வருகிற அளவிற்கு அப்பெண்களையே வெளியில் அனுப்ப ஆரம்பித்துள்ளான். நாம் தலைகவிழ்ந்து கொள்கிற தலையாயப் பிரச்னை இது!


எஸ்.நரேந்திரன், ஆரணி.

இப்போது எந்த வியாபாரம் படு ஜோர்?

கல்வி வியாபாரம். சில கல்லூரிகளின் இன்ஜீனியரிங் இடம் இரண்டு இலட்சம் முதல் ஏழு இலட்சம். பிப்ரவரி முதலே முன்பணம் வாங்க ஆரம்பித்து விட்டார்கள். அரசு நிர்ணயிக்கிற கல்விக் கட்டணமெல்லாம் காற்றில் பறக்கிறது. தன் பிள்ளை இலட்ச இலட்சமாகச் சம்பாதித்தால் போகிறது. எனவே இது செலவல்ல மூலதனம் தான் என்று சக்தியுள்ளவர்கள் அள்ளிக் கொண்டு போய்க் கோணியில் கொட்டுகிறபோது கல்லூரித் தாளாளர்கள் கையைக் கட்டிக் கொண்டு, ஊகும் இதைத் தொடமாட்டேன் என்றா சொல்வார்கள்? எல்லாம் நம் (பணக்காரப்) பெற்றோர் செய்யும் தவறு!


நே.யயாதி, பட்டுக்கோட்டை.

சென்னைப் போக்குவரத்தின் கொடுமையை ஒரு நாள் சந்தித்தேன். (எட்டு கிலோ மீட்டரைக் கடக்க ஒன்றே கால் மணி நேரம்) இனி சென்னைப் பக்கம் எட்டிப் பார்ப்பதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். என் முடிவு பற்றி உங்கள் கருத்து?

சென்னையில் உங்களுக்கு ஆக வேண்டிய வேலைகள் நிறைய வரும். உங்கள் வைராக்கியம் பல பெண்களின் பிரசவ வைராக்கியம். (இனிமேல் பிள்ளையே பெற்றுக்க மாட்டேன்!) போன்றதுதான். வசதி படைத்தவர்களின் குமிப்பும், வாங்கும் சக்தியின் மிகையும், கடன் கொடுக்க முன் வரும் ஏராளமான அமைப்புகளும் வாகனங்களைப் பெருக்கிவிட்டன. நான் கூட சைக்கிள் வாங்குவதைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்து வருகிறேன். உடற்பயிற்சிக்கு உடற்பயிற்சியாச்சு. சேமிப்புமாச்சு! நேரமும் மிச்சம்!


ஆர்.தேவேந்திரன், கொளத்தூர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் காலை வாருகிறதே?

அவரவர் தங்களது சொந்தத் திறமையைச் சரிவர வெளிக்காட்டினாலே போதும். சீட்டுக்கட்டை அடுக்கி வைத்துத் தட்டி விட்டால் சாயுமே, அப்படிச் சாய்கிறார்கள். திறமையானவர்கள் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் தன்னம்பிக்கையை இழந்து ஆடும்போது அணியின் தோல்விக்கே பங்களிக்கிறார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் புறப்பட்டுப் போனதுமே சூப்பர் கிங்ஸ் ஆட்டமே காண ஆரம்பித்துவிட்டது.

இன்னமும் துளி நம்பிக்கை இருக்கிறது பார்ப்போமே!


எஸ்.குருமூர்த்தி, காஞ்சிபுரம்.

தமிழகத்தில் மின்நிலைமை மேம்பட்டிருக்கிறது என்று மின்துறை அமைச்சர் சாதிக்கிறாரே?

ஏற்காட்டிற்கு அண்மையில் சென்றிருந்தேன். பின்னர் சொந்த ஊருக்குச் சென்றிருந்தேன். நிலைமைகளை விசாரித்தேன். இரவு முழுக்க மின்சாரம் இல்லாத நிலைமைகளைச் சந்தித்தேன். உள்ளூர் நண்பர்கள் உறவினர்களை விசாரித்தேன். மின்சாரமா? அது எப்ப வேணும்னாலும் போகும் எப்ப வேணும்னாலும் வரும் என்று இளக்காரமாகப் பேசுகிறார்கள். சட்டமன்றத்தில் உறுப்பினர் கேள்விகளுக்குப் பதில் சொல்வது எளிது. பாதுகாக்க சபாநாயகர் இருக்கிறார். மக்கள் மன்றத்திற்குப் பதில் சொல்வது கடினம்!


ஜி.ராஜேந்திரன், மாதவரம்.

தினசரி ஒரு போராட்டம் நடத்தும் ஜெயலலிதா பற்றி?

கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தனது கட்சிக்காரர்களுக்கு இவர் வேலை கொடுத்து வருகிறார். இவரைத் தப்பாய் நினைக்காதீர்கள்.


சி.ஜெகதீசன், சென்னை.

புதிய நீதிக் கட்சிக்கு சில நிர்பந்தங்களால் இதுவரை தொய்வு இருந்தது. இனி அது வீறு கொண்டு எழும் என்கிறாரே ஏ.சி.சண்முகம்?

அந்தக் கட்சிக்கு வந்த சிக்குன்குனியா இப்போது சீராகிவிட்டது என்கிறாரா? எப்படியோ அவர் சமுதாயத்தினருக்கு இவரால் புதிய நீதி பிறந்தால் சரி!


டி.துளசிராம், சென்னை-11.

நண்பர்கள் என்றால் அவர்கள் எப்படி இருக்க வேண்டும்?

ஒரு பாரி- கபிலர் மாதிரி - ஒரு ரோல்ஸ் ராய்ஸ் மாதிரி, ஒரு ஷெல்லி கீட்ஸ் மாதிரி, ஒரு ஹிட்லர் முசோலினி மாதிரி, ஒரு காரல் மார்க்கஸ் ஏங்கல்ஸ் மாதிரி, சொல்லிக் கொண்டே போகலாம். நாம் இவர்கள் மாதிரியா இருக்கிறோம்?


ஜே.பன்னீர், அம்பத்தூர்.

சென்னை ஆறுகளில் படகுகள் மூலம் கொசு ஒழிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளதே?

அன்றைய தி.மு.க. ஆட்சியில் கூவத்தில் படகு குழாம்கள் கட்டியது எவ்வளவு நல்லதாய்ப் போச்சு? தி.மு.க.வில் படகுச் சவாரி என்பது மக்களுக்காக இல்லை; கொசுக்களுக்காக என்பது தெரிய எவ்வளவு நாட்களாச்சு.


வி.சுரேஷ், அரக்கோணம்.

மிகக் காஸ்ட்லியான பயணம் என்று எதைச் சொன்னீர்கள்?

யாழ்ப்பாணத்திலிருந்து ராமேஸ்வரம் கரைக்குக் கொண்டு வந்து சேர்க்க இலட்ச ரூபாய் கட்டணமாமே, இதைத்தான் சொல்வேன்! இதற்கு அடுத்தபடியாம் சென்னை ஆட்டோ ஒரு கிலோ மீட்டருக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை (நீங்கள் எவ்வளவு பெரிய இளிச்ச வாயர் என்பதைப் பொறுத்தது). அமெரிக்கா செல்ல குறைந்தபட்சக் கட்டணம் 43,000 ரூ. (சென்னை-சான்பதான் கிங்கே…) (போக, வர கி.மீட்டரில்) - இவற்றை 50,000 கூட தான் வருகிறது.

30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 4:32 am
Filed under: Uncategorized
2008/06/06 Lena Katturai

Posted on Friday 6 June 2008

lena.jpgஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!

எல்லாப் புகழுரைகளும் எல்லா அன்புரைகளும் நமக்கு நன்மை செய்பவை என்கிற முடிவிற்குத் தயவு செய்து வந்துவிடாதீர்கள்.

இவற்றைப் பாகுபாடு செய்து பிரித்து அறிய கற்றுக்கொள்ளுங்கள்.

காரணம், நம்மைச் சுற்றி ‘அடுத்துக் கெடுப்பவர்கள்’ உண்டு. இப்படிச் சொன்னதை வைத்து எல்லோருடைய அன்பும் ஐயப்பாட்டிற்குரியது என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம்.

புகுந்த வீட்டில் நமக்கு எதிராக இழைக்கப்படுகிற அநீதிகளைத் தாயிடமும் தந்தையிடமும் சொல்கிறாள் ஒரு மகள்.

”ஆமாமா! நீ செய்யுறதெல்லாம் சரி. உன் மாமியார் வீட்ல நடக்குறதெல்லாம் அநியாயம்” என்று ஒரு தாய் நியாயம் (?) பேசினால் இத்தாய் ஓர் ஆபத்தான தாய்தான்.

”இதெல்லாம் சகஜம்மா. உன் பக்கம் உள்ள தவறுகள் என்னென்று சொல்றேன் கேளு!” என்று ஆரம்பிக்கிற தந்தை இருக்கிறாரே, இவர், ஒரு மகளுக்கு விரோதி போலத்தான் தோன்றுவார். ‘இனி அப்பாகிட்ட நான் எதுவுமே சொல்லப் போறதில்லை. ஒரு பெண்ணின் கஷ்டம் இன்னொரு பெண்ணுக்குத்தான் நல்லாப் (!)

புரியும்’ என்கிற முடிவிற்கு அந்த மகள் வருகிறாள் என்றால், இதை விடக் கோளாறான முடிவு வேறு இருக்க முடியாது.

படர்வதற்குக் கொம்பு தேடும் கொடி, ஓர் உளுத்துப்போன கட்டையைத் தேர்ந்தெடுப்பதற்குச் சமமான விஷயம் இது.

சரி, எல்லா அன்பையும் சந்தேகிக்கக் கற்றுத் தருகிறீர்களா நீங்கள் என்று என்னைக் கேட்கிறீர்கள். அப்படித்தானே?

இல்லை என்கிறேன். நம் பக்கத்துக் குறைகளை எடுத்துச் சொல்லாத அன்பு, நியாயமற்ற அன்பு.

மேடையில் பேசிவிட்டு இறங்கியதும் நம் பேச்சைப் பாராட்டுகிறவர்களை நமக்குப் பிடிக்கிறது. நல்லாப் பேசினீங்க. ஆனா, ரொம்ப நீளம் என்ற சொல்பவர் நமக்கு எதிரியாகப்படுகிறார். ஆனால் இவரே நமக்கு நன்மை செய்தவர்.

இனி இப்படிக்கொள்ளலாம். நாம் விரும்பும் படியாகவே பேசுகிறவர்கள் அந்த நேரத்து நன்மையாளர்கள். நாம் விரும்பாதவற்றையும் சுட்டிக் காட்டுகிறவர்கள் நம் நிரந்தர நன்மையாளர்கள்.

லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்

2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?

2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!

2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?

2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?

2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!

2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!

2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!

2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘

2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?

2008/03/28 நற்சொல்லால் கண்டிப்பது எப்படி?

2008/03/21 இருப்புகள் இருக்கட்டும்

admin @ 12:28 am
Filed under: Uncategorized
2008/05/30 Junior Kelvi Pathil

Posted on Friday 30 May 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

கே.முருகானந்தம், திருவேற்காடு

மனிதன் எப்போது பிரச்னையில்லாமல் இருப்பான்?

அவனது வாழ்க்கைப் பாதை, தரமணியில் உள்ள ஐ.டி.காரிடர் சாலை மாதிரி இருந்தால், பயணம் சுகமாக இருக்கும். ஆனால், சுவாரசியமாக இருக்காது. தடையில்லா பயணம், மடையில்லா ஆறு!


அ.கண்ணன், சென்னை-72.

ராகுல் காங்கிரஸில் தேறி விடுவாரா?

உணவு சரியாக இருந்தால் எந்தக் குழந்தையும் கொழுகொழுதான்! காங்கிரசில்தான் ஊட்டச் சத்துக்குறைவு இல்லையே! சுதந்திரம் பெற்றதிலிருந்தே இந்திய கஜானாக்கள் அதன் வசம்தானே உள்ளன. அம்மா மாதிரி இவர் விசாக்காரர் இல்லை. உள்ளூரிலேயே மணியக்காரரிடம் பிறப்புச் சான்றிதழ் வாங்கியவர். எனவே தேறிவிடுவார்.


டி.ராஜ், முசிறி.

விளம்பரங்களுக்கும் சென்சார் வரப்போவது குறித்து?

ஆண் அணிந்திருக்கும் உள்ளாடையில் அழகைப்பார்த்து ஒரு பெண் கதவைச் சாத்தும் அசிங்க விளம்பரத்தைப் பார்த்தபோது நெஞ்சு பதறியது. அட, பாவம் செய்த இந்தியர்களே, நாடு கடந்த இந்தக் கலாச்சார சீர்கேட்டைப் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறதே நீங்கள்!


ஆர்.தர்மாம்பாள், வேலூர்.

கத்திப்பாரா சந்திப்புப் பாலத்திற்கு நேருவின் பெயர்தானே பொருத்தம்?

நேருவுக்கு நாடு முழுக்க நிறையப் பெருமைகள் சேர்த்துவிட்டோம். கப்பலோட்டிய தமிழர் வ.உ.சியின் பெயரை வைத்தால் நல்லது என்று சிபாரிசு செய்யத் தோன்றுகிறது.


எல்.புருஷோத்தமன், சிவகங்கை.

புதுக்கோட்டை-சிவகங்கை அகல இரயில்பாதை தள்ளிப் போகிறதே?

தாமதம் என்பது இரயில்வே துறையின் குத்தகை. எதுவும் நேரத்திற்கு நடந்தால் அது இரயில்வே துறையே அல்ல!


எஸ்.ரவி, தஞ்சை.

உங்களுக்கு எந்த மாதிரி பெண்களைக் கண்டால் பிடிக்காது?

ருத்ரதாண்டவம் என்பது ஆண்வர்க்கமான சிவனுக்கு மட்டும்தான் சொந்தமா? பெண் வர்க்கமான இந்த சக்திகளுக்குக் கிடையாதா என்று சொந்தம் கொண்டாடுகிறார்களே, அந்த மாதிரிப் பெண்களைக் கண்டால்!


ஆர்.பாலாஜி, கும்பகோணம்.

கல்லூரிக் கல்விக்குப் போனதும் பலரது கல்வி ஆர்வம் குறைவது ஏன்?

பள்ளிக் கல்வியில் ஒரு பாடத்தில் தோற்றாலும் அதே வகுப்பில் பெஞ்சைத் தேய்த்துக் கொண்டிருக்க வேண்டும். கல்லூரிக் கல்வியில் மொத்தமாய்த் தோற்றாலும் அரியர்ஸுக்குச் ‘சியர்ஸ்’ சொல்லிவிட்டு அடுத்த வகுப்பிற்குப் போகலாம் என்கிற நினைப்புதான்.


ஏ.திருமலை, கல்பாக்கம்.

கடலூரில் மின்நிலையம் அமைப்பதைத் தடுப்போம் என்ற ராமதாஸின் புதிய அஸ்திரம் பற்றி?

இவரது அம்பறாத் தூணியில் எத்தனை அம்புகள் மிச்சம் இருக்கிறது என்று யாராவது எண்ணினால் கூடத் தேவலை.


டி.ஜாபர்ஹீசேன், சென்னை.

சென்னை மெரீனாவில் காதலர்களுக்கு ஏகக் கட்டுப்பாடுகள் விதித்திருக்கிறதே காவல்துறை?

காதலர்களா இவர்கள்? காமுகர்களால் வந்த வினை இது?


ஜே.வினோத், மீஞ்சூர்.

திரையுலக ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டு இனி அரசியலில் தீவிரம் காட்டப்போகிறேன் என்று சொல்லியிருக்கும் விஜய டி.ராஜேந்தரைப் பற்றி?

எல்லோரும் சேர்ந்து அரசியலை நீர் மோராக்கி அதைத் தண்ணீர்ப் பந்தலுக்கே கொண்டு வந்து விட்டார்கள். இனி யார் வேண்டுமானாலும் அதைப் பருகலாம்.


ச.மெய்யநாதன், இராமநாதபுரம்.

சிம்புதேவன் தொடர்ந்து காமெடி படங்களை மட்டுமே தருவாராமே?

சிம்புதேவனின் நகைச்சுவை பாதிக்கிணறு தாண்டிய கதைதான். நல்ல களங்களை உருவாக்குகிறார். நகைச