Srilanka’s Tamils issue: Ramadoss supports Karunanidhi

Posted on Wednesday 8 October 2008

தமிழனத்தை காக்க தலைமை ஏற்றால் கருணாநிதிக்கு துணை நிற்போம்: ராமதாஸ்

சென்னை: தமிழினத்தை காக்க முதல்வர் கருணாநிதி தலைமை ஏற்றால், அவருக்கு தமிழகமே துணை நிற்கும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கையில் செத்து மடிந்து கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுகின்ற ஒரு விஷயத்திலாவது இங்குள்ள தமிழர்கள் ஒன்றுபட்டிருப்போம். நமக்குள்ளே சச்சரவுகள் தேவையில்லை. எல்லோரும் ஒன்றுபட்ட நிலையில் இலங்கைத் தமிழர் பிரச்னையை அணுகுவோம் என்று முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள வேண்டுகோளை முழுமனதோடு வரவேற்கிறேன்.

முதல்வரின் இந்த வேண்டுகோள் பேச்சளவில் நின்றுவிடக் கூடாது. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பிரச்னையில் நமக்குள் ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர்களை காக்கும் பிரச்னையில் இப்போது தமிழகத்தில் ஒற்றுமையை வலுப்படுத்துகின்ற வகையில் ஒருமித்த கருத்துடைய அனைத்து அரசியல் இயக்கங்களையும் ஓரணியில் திரட்டி இலங்கை மண்ணில் தமிழினத்தை ஒழித்துக்கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு மூர்க்கத்தனமாக போரிட்டு வரும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் புகட்டுவதற்கான நடவடிக்கைகளை வகுத்து செயல்பட முதல்வர் முன் வர வேண்டும்.

தமிழர்கள் எங்கு செத்தாலும் அவர்களும் தமிழர்கள்தான். அந்த தமிழர்களை காப்பாற்றுகின்ற பொறுப்பு தமிழக முதல்வருக்கும் அவர் தலைமையிலான அரசுக்கும் இருக்கிறது. முதல்வர் கருணாநிதி அந்த பொறுப்பை உணர்ந்து கடமையாற்ற முன்வந்திருக்கிறார் என்பதை அவரது பேச்சு வெளிப்படுத்துகிறது. அதற்காக அவரை மனதார பாராட்டுகிறேன்.

இந்த பிரச்னையில் அதிகாரிகள் மட்டத்தில் பேசி பயனில்லை. பிரதமரே நேரடியாக இலங்கை அதிபரை தொடர்பு கொண்டு இந்தியாவின் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராணுவம் நடத்தும் அட்டூழியங்களையும் அத்துமீறல்களையும் நேரில் அறிந்து வர இங்கிருந்து நாடாளுமன்ற குழுவை அனுப்ப வேண்டும். தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் அதில் இடம் பெற வேண்டும்.

தமிழர்களின் நிலையை அவர்கள் அறிந்து வர வேண்டும். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின்படி மத்திய அரசு மனிதாபிமான உதவிகளை செய்ய வற்புறுத்த வேண்டும்.

தமிழனத்தை காக்கும் பணியில் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி தலைமை ஏற்க முன் வர வேண்டும். இதில் தமிழகமே அவருக்கு துணை நிற்கும்’ என்று கூறியுள்ளார்.

admin @ 9:28 pm
Filed under: news
Srilankan Tamils issue: CM must meet PM, says Ramadoss

Posted on Tuesday 7 October 2008

s_ramadoss.jpgதமிழரைக் காக்க பிரதமரை கருணாநிதி நேரில் சந்திக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி பிரதமரை நேரில் சந்தித்து முதல்வர் கருணாநிதி முறையிட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தமிழர்கள் பகுதிகள் மீது இலங்கை ராணுவம் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தி வருகிறது. அப்பாவி தமிழர்களை தினமும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது.

லட்சக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களது சொந்த நாட்டிலேயே அகதிகளாக உயிருக்கு எந்தவித உத்தரவாதமுமின்றி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். சொந்த வீடுகளை இழந்து, இடம் பெயர்ந்துள்ள இவர்கள் உண்ண உணவின்றியும், மருந்துகள் இன்றியும் வாடிக் கொண்டுள்ளனர்.

ஹிட்லர் நடத்திய இனப்படுகொலையை விடவும் மோசமான படுகொலையை ராஜபக்சே நடத்திக் கொண்டிருக்கிறார். தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் சபதத்தை துணிந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறார். இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இந்திய அரசு வாய் திறக்கவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.

இலங்கை தமிழர்களைக் காக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய தமிழக அரசும் அந்தக் கடமையை செய்யவில்லை என்று உலக தமிழர்களெல்லாம் வேதனையோடு மூழ்கி நிற்கின்றனர். அவர்களது வேதனையில் நியாயம் இல்லாமல் இல்லை.

பிரதமருக்கு லட்சக்கணக்கில் தந்திகளை அனுப்பி வையுங்கள் என்று முதல்வர் கூறியுள்ளார். அது வரவேற்கத்தக்க கோரிக்கைதான். ஆனால் இவை மட்டும் போதாது, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி விடுத்த வேண்டுகோளுக்குப் பிறகும், இந்திய அரசு இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இலங்கையில், இப்போது போர் நடவடிக்கைகளும், போர்ப்படையினரின் தாக்குதல்களும் தீவிரமாகி இருப்பதும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை தொடங்குவதற்கான அறிகுறியே இல்லாததும், இலங்கைத் தமிழர் பிரச்னையில் சட்டப்பேரவையும், தமிழக மக்களும் விரும்பிய நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இத்தகைய சூழ்நிலையில் எங்கோ ஒரு மூலையில் பொதுக்கூட்டம் நடத்தி, நிலைமையை விளக்குவதாலும், தந்திகள் அனுப்பிக் கொண்டிருப்பதாலும் நாம் விரும்புகின்ற பயன் ஏற்படப் போவதில்லை.

முதல்வரும், அவரது தலைமையிலான அரசும் பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் நேரடியாக தொடர்பு கொண்டு பேச வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில், கடந்த சில ஆண்டுகளாக இல்லாத ஒற்றுமை இப்போது தமிழக அரசியல் களத்தில் உருவாகியிருக்கிறது. இந்த நல்ல சூழ்நிலையை முதல்வர் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அமைதி பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும். தமிழர்களைக் கொன்று குவித்து வரும் சிங்களப் போர்ப்படையினருக்கு எந்தவித உதவியும் வழங்கக் கூடாது’ என்று கூறியுள்ளார்.

admin @ 12:05 am
Filed under: news
Reservevation should give on society base only: Ramadoss

Posted on Sunday 5 October 2008

ramadoss.jpg27 சதவிகித இடஒதுக்கீடு சமூகரீதியில் அமையவேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: இட ஒதுக்கீடு சலுகை என்பது சமூகரீதியில் வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதாரரீதியில் வழங்கப்படக் கூடாது என்று  ராமதாஸ் ‌‌கூறியுள்ளார். 

இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி ‌நிறுவன‌ர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘வேலைவாய்ப்பு, கல்வியில் இடஒதுக்கீடு சலுகையைப் பெற்றிட இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான வருமான உச்சவரம்பு ரூ. 2.50 லட்ச‌த்‌தி‌லிருந்து ரூ.4.50 லட்சமாக உயர்த்திட மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இடஒதுக்கீடு சலுகை என்பது சமூகரீதியில் வழங்கப்பட வேண்டுமே தவிர, பொருளாதாரரீதியில் வழங்கப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருக்கிறது.

எனவே, தற்காலிக ஏற்பாடாக வருமான உச்சவரம்பை உயர்த்தியுள்ளதை வரவேற்கின்ற அதே நேரத்தில் அடுத்தகட்டமாக வருமான உச்சவரம்பை முற்றிலுமாக நீக்கிட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வற்புறுத்துகிறேன். இதற்காக தொடர்ந்து நாங்கள் போராடவும் தயங்கமாட்டோம்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். மற்றும் மத்திய அரசுக்கு சொந்தமான பல்கலைக்கழகங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 ‌சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு முதல்படியாக மிகக் குறைந்த அளவிலான இடங்களே ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

பிற்படுத்தப்பட்டவர்களில் வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை இல்லை என பெரும்பாலானவர்களை ஒதுக்கி வைத்துவிட்டதால், இந்த குறைந்த அளவிலான இடங்களைக் கூட நிரப்புவதற்கு தேவையான அளவுக்கு போட்டியாளர்கள் கிடைக்கவில்லை என்று சொல்லி 400-க்கும் மேற்பட்ட இடங்களை பொதுப்பட்டியலுக்கு மாற்ற இருக்கும் ஆபத்தை மத்திய அரசு இப்போது மேற்கொண்டுள்ள இந்த முடிவு தடுத்து நிறுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால், இதுவே நிரந்தர பரிகாரமாக இருந்துவிட முடியாது. இனி அடுத்து வரும் ஆண்டுகளில் 27 ‌சதவிகிதம் அளவிற்கான இடங்களை முழுமையாக நிரப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, தேவையான அளவுக்கு போட்டியாளர்கள் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக பெரும்பாலான இடங்கள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படும் ஆபத்து இருந்து கொண்டுதான் இருக்கும்.

எனவே, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு கொல்லைப்புறமாக வர இருக்கும் ஆபத்தை நிரந்தரமாக தடுக்க வேண்டுமானால், பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோர் என்ற தடையை முற்றிலுமாக தகர்த்தெறிய வேண்டும். வருமான வரம்பு இல்லாமல் பிற்படுத்தப்பட்டோர் சலுகையை கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் செயல்படுத்த வேண்டும்.

இடஒதுக்கீட்டின் தாயகம் என்று அழைக்கப்படும் தமிழகத்திலிருந்து இதற்கான முயற்சி தொடங்கப்பட வேண்டும். சமூகநீதியில் நம்பிக்கையுடைய அனைத்து அரசியல் இயக்கங்களும் இதற்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும்’ எ‌ன்று கூறியுள்ளார்.
 
 

admin @ 11:10 pm
Filed under: news
2008/10/03 Punch Balu

Posted on Friday 3 October 2008

durai-murugan.jpg‘பஞ்ச்’ பாலு

தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.

பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!

அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.

பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?

…………………..

வீரத்தின் விளைநிலமான கம்யூனிஸ்ட்டுகளின் கால்கள் நான்கைந்து ஸீட்டுகளுக்காக விஜயகாந்தின் வீட்டு வாசலை மிதிக்கலாமா? -அமைச்சர் துரைமுருகன்.
சுயநலமாக செயல்படுவதும், சந்தர்ப்பவாத அரசியல் நடத்துவதும் உங்களுக்கு மட்டுமேயான சொத்தா என்ன? அவர்களும் தான் கொஞ்சம் அனுபவிக்கட்டுமே! 

தமிழகத்தில் மந்தரி ஆகும் கனவு தகர்ந்துவிட்டதே என்ற கேள்விக்கு….

”கனவு தகர்ந்துவிட்டது என்று கூற முடியாது. விருப்பம் நிறைவேறவில்லை என்று வேண்டுமானால் கூறலாம். காங்கிரஸ் கனவு என்பது எங்கள் தலைமையில் அரசு அமைவதுதான். அதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம்.”
- பீட்டர் அல்போன்ஸ் பதில்
தூங்குவதிலா தீவிரம்? அரசு அமைப்பது கனவுதான் என்றால், 40 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தூங்கிக்கொண்டு தான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? எப்போது விழிப்பீர்கள்?

தமிழக ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க காங்கிரஸ் கட்சிக்கு முழு அதிகாரம் இருக்கிறது. தி.மு.க. ஆட்சியைத் தாங்கிப் பிடித்திருக்கும் ஒரே கட்சி காங்கிரஸ். தனிமரமாக நின்று காங்கிரஸ் மட்டும் தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட காங்கிரஸை கலைஞர் மதிக்கவில்லை.
- பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேட்டி
இதைத் தட்டிகேட்க காங்கிரஸ்காரர்களுக்கே தில்லு இல்னேன்னும்போது நீங்களாச்சும் கேட்டீங்களே… சந்தோஷம். ஆமாம் நீங்கள் எப்போது காங்கிரசின் கொ.ப.செ. ஆனீர்கள்? மது ஒழிப்பு, தமிழ் வளர்ச்சி எல்லாம் போரடித்துவிட்டதா? தி.மு.க., காங்கிரஸ் இடையே  பற்றிக்கொண்டால், அதில் குளிர் காயலாம் என்பதுதானே தங்கள் எண்ணம்?

மனம், கடவுள் இரண்டும் மிகவும் ஒத்திருக்கும் இரண்டு விஷயங்கள். மனம் எங்கு இருக்கிறது என்பதும் தெரியாது. கடவுள் எங்கு இருக்கிறார் என்பதும் தெரியாது. விலாசம் இல்லாதவர்களெல்லாம் நெருக்கமாகத் தான் இருப்பர் போல. உயர்ந்த எண்ணம் எது என்ற வரையறுப்பதில் சிக்கல் உள்ளது. நான் முதல்வர் ஆக வேண்டும் என நினைத்தால் அது உயர்ந்த எண்ணம் இல்லை. அது சந்தர்ப்பம் பார்ப்பதுதான்.
-விழா ஒன்றில் நிதி அமைச்சர் அன்பழகன்
உங்கள் பேச்சு தத்துவம் போலிருந்தாலும் அது தத்துவம் அல்ல. இரண்டாம் இடத்தை தக்கவைத்துக் கொள்வதில் மட்டுமே அக்கறைக் காட்டும், மனதை செலுத்தும் அல்லது அதற்கு மட்டுமே தன்னை தயார்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் புலம்பல் போலதான் உள்ளது. முதல் இடம் எப்போதுமே இரண்டாவது இடத்திற்கு ஆசைப்படுபவர்களுக்கு கிடைக்கவே கிடைக்காது.

admin @ 4:03 am
Filed under: Uncategorized
2008/09/26 Junior Kelvi Pathil

Posted on Friday 26 September 2008

ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

ஏ.கருப்பன், பெங்களூர்-2.

தமிழ்நாட்டில் மேலும் நாற்பது லட்சம் இலவச தொலைக்காட்சிகளை அரசு வழங்கப் போகிறதாமே?

சேலம், காரியாப்பட்டியில் அந்த வேளை பாலுக்கு அழுத குழந்தையையும்,அந்த வேளை பசிக்குத் தாங்காத குழந்தைகளுமாய் மூன்று பேரைக் கிணற்றில் தள்ளிச் சாகடித்த ஒரு குடும்பத்தின் அவல நிலையைக் கலைஞர் பத்திரிகைகளில் பார்த்திருக்க மாட்டார் என எண்ணுகிறேன். பசிப்பிணிப் போக்காதவர்களுக்கு தொலைக்காட்சியெல்லாம் முக்கியமாகத் தெரிவது எப்படி.


எல்.வெங்கிட்டு, பாபநாசம்.

விலைவாசி உயர்வு, டீசல் தட்டுப்பாடு, மின்வெட்டு போன்றவற்றில் நிர்வாகத் திறனற்ற கலைஞர் பதவி விலக வேண்டும் என்கிறாரே ஜெயலலிதா?

ஜெயலலிதாவை மக்கள் ஆதரிக்கிறார்களோ இல்லையோ, இந்த விஷயத்தில் அவரை எல்லோரும் ஆதரிக்கிறார்கள். அவர் மலை மீது இருந்தாலும் சரி, மண் மீது இருந்தாலும் சரி அவர் விடுக்கிற அறிக்கைகள், அறிவாலயத்தைக் கொஞ்சம் அசைக்கவே செய்கிறது. இதுதான் அம்மா!


ஆர்.விஜய், முகப்பேர்.

சவரன் 4000 ரூபாய் என்று நம்பிக் குவிந்த பாமர மக்களைப் பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?

செய்கூலி இல்லை; சேதாரம் இல்லை. கற்களுக்குக் கட்டணம் இல்லை. பற்றுக்கு இவ்வளவு ரூபாய் குறைவு என்று விற்கும் நகை வியாபாரிகளிடம் போய் விழுகிற நிலையில் படித்தவர்களே இருக்கும்போது பாமரர்கள் என்ன செய்வார்கள் பாவம். இது எப்படிச் சாத்தியம் என்கிற கேள்வி எழ வேண்டாமா? தங்கத்தின் தரத்தில் கைவைத்துத்தானே இவற்றைச் சாத்தியப்படுத்துகிறார்கள்? தரத்தை நீ எவ்வளவு வேணும்ன்னாலும் குறைச்சுக்கோ எனக்கு வேண்டியவையெல்லாம் சலுகைகளே என்கிற அறிவிப்புதானே ஏமாற்று நகைக்கடைகளில் படித்தவர்களின் கூட்டம்? பாதிச் செம்பு கலந்துக்கோ பரவாயில்லை. ஆனால் பாதி விலைக்குத் தா என்று தங்கள் பங்கிற்கு அறிவிக்கிறது பாமரர் கூட்டம்.


எம்.இமானுவேல், சேலம்.

நாம் எதிர்பார்ப்பது நடக்கிறதா?

எங்க நடக்கிறது? வெடிகுண்டுப் பிரச்னைகள் குப்பைத்தொட்டிக்குப் போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்? ஆனால் அப்பிரச்னைகளின் தொடக்கமே அந்த குப்பைத் தொட்டியாகத்தான் இருக்கிறது.


கே.சுந்தர், வந்தவாசி.

ஐநூறு ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட மாட்டாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதே?

அட, ரிசர்வ் வங்கியில் ஏதேனும் தேர்தல் நெருங்கிவட்டதா? அவர்களும் அரசியல் பண்ண ஆரம்பித்துவிட்டார்களே?


எல்.கற்பகம், திருப்பூர்.

தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் எல்லோருக்கும் வேலை கிடைக்கிறதா?

எல்லோருக்கும் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் சரியான கூலி கிடைப்பதில்லை. அதனால்தான் ஆங்காங்கே சிறுசிறு பிரச்னைகள், கட்சி ஊர்வலங்கள், கண்டன ஊர்வலங்கள், சாலை மறியல்கள், பந்த்கள், கல்லெறிதல், தீ வைத்தல் போன்றவற்றிற்கு நிறையப் பேர்கள் கிடைக்கிறார்கள். கூலிக்கும், கூலி இல்லாமலும்!


சி.முத்துக்குமார், சென்னை-4.

சத்யராஜ் இல்லத் திருமண வரவேற்பில் தங்களைக் கண்டேனே! திரையுலக இல்லத்து விசேஷங்களை விடமாட்டீர்களா?

அப்படியில்லை. திரையுலகில் சிலரை நான் விதிவிலக்காகக் கருதிப் பழகுவது உண்டு. மற்றபடி திரையுலகினரிடமிருந்து விலகி இருப்பதையே என் நெஞ்சம் விரும்புகிறது. நெருங்கிப் பழகி நட்புணர்வு வளர்ந்தால் மனத்தில் பட்டதை எழுதவோ விமர்சிக்கவோ முடியாமல் போய்விடும். நன்கு பழகினால் தங்கள் படத்தையும் தங்களைப் பற்றியும் நன்றாக எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளவர்கள் திரையுலகில் மிக அதிகம். இது நம் எழுத்துச் சுதந்தரத்தைப் பறித்துக் கையைக் கட்டிப் போடுகிறது. சத்யராஜ் விதிவிலக்கானவர். நிற்க. திருமண வரவேற்பா அது? மாநாடு! அப்படித்தானே?


ஆர்.ஜெயங்கொண்டான், திருச்சி-1.

ஒரு ரூபாய் அரிசித் திட்டம் மூலம் துணிப் பைகளில் கலைஞர் படம்; பேருந்துகளில் கலைஞரின் தத்துவங்களுடன் அவர் படம்; ஜெயலலிதா உருவாக்கியுள்ள இளைஞர் பாசறையின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பனியனில் ஜெயலலிதா படம், பாசறையின் கனிணிப் பயிற்சி மையங்களில் முதல் ஸ்கிரீனில் ஜெயலலிதா படம். நன்கு வளர்ந்து விட்ட இவர்கள், தங்கள் தோற்றத்தை முன்னிலைப்படுத்திக் கொள்வதில் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்?

தமிழகம் தனிமனித வழிபாடு (Hero worship) சார்ந்த அரசியலையே சாரமாகக் கொண்டது. ஆனால் இத் தலைவர்கள் இருவரும் உணர வேண்டியது மனத்தில் தங்கள் உருவம் பதியும் படியான சேவைகளையும் ஊழியத்தையும் மக்களுக்குச் செய்ய வேண்டும் என்பது.


இரா.ஆண்டியப்பன், குளித்தலை.

விஜயகாந்த் யாரோடு கூட்டணி வைத்துக் கொள்வார்?

இது இன்னும் முட்டையாகவே இருக்கு. குஞ்சானால் சொல்கிறேன்.


கே.முகமது பாஷா, தொண்டி.

இந்தியத் தொலைக்காட்சிகளில் இந்தியன் எதிர்பார்ப்பது?

‘மீண்டும்’ பொடா என்கிற சீரியல். இந்தச் சீரியலை ஒளிபரப்பினால் எல்லோரும் கேபிளை தூரப் போட்டுவிட்டு டி.டி.எச் - சேவைகளையே எதிர் கொள்வார்கள். பொடாவை அவ்வளவு துல்லியமாகப் பார்க்க வேண்டும் என்பதே இன்று எல்லோருடைய ஆசை.


டி.அழகு, விருத்தாச்சலம்.

கலைஞரும், ராமதாசும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்…? என் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களும் கேள்வி-பதில் ஆரம்பித்துவிட்டார்கள். நாமாவது நான்கு பக்கம்! அவர்கள் பக்கம் டூ பக்கம் ஒரே கேள்வி-பதில் மயம்தான்.


ஏ.அப்துல்ஹமீது, வேலூர்.

சிவராஜ் பாட்டீல் இராஜினாமா செய்ய வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு சரியா?

உள்துறை அமைச்சருக்கென்று சில முக்கியப் பொறுப்புகள் இருக்கின்றன. இவற்றுள் முக்கியமானது மக்களின் உயிர்ப் பாதுகாப்பு. ஒரு வன்முறை இயக்கம் மக்களோடு மக்களாகக் கலந்து வெடிகுண்டுகளைப் பரவலாக்குகிறபோது அதை வேரோடு பிடுங்குவது கடினமான செயல். ஆனால் மிக நெருங்கிய வட்டதிற்குத்தான் இவர் என்ன செய்யத் தவறினார் என்பது தெரியும். வெடிகுண்டுகளுக்கெல்லாம் இராஜினாமா என்றால் இந்தியாவில் மாதத்திற்கு ஒரு உள்துறை அமைச்சர் தேவைப்படுவார்!


அ. அப்துல்காதர், பாண்டிச்சேரி.

சுமார் அறுபத்து நான்கு லட்சம் கோடி இந்தியப் பணம், சுவிஸ்நாட்டு வங்கிகளில் மட்டும் முடங்கிக் கிடக்கிறதாமே?

கொஞ்சம் இருங்க. வியப்பில் வெளிவந்த என் கண்களை உள்ளே தள்ளிக் கொள்கிறேன். நம் அரசியல் மாண்புகளின் மகத்தான சாதனையை எண்ணி வியக்கிறேன். இந்தியா வறுமை நாடா? எந்த பத்தாம்பசலி சொன்னான்.


வி.எம்.கணேசன், தஞ்சாவூர்.

வரப்போகும் ஆறு மாநிலத் தேர்தல்களின் முடிவுகள் எப்படியிருக்கும்?

சோனியா பிரசாரத்திற்குப் போகாமலிருந்தால், அதன் முடிவுகள் எப்படியிருநதாலும் சமாளித்துவிடலாம். அவர் போனால்தான் தோற்றதற்கு என்ன சொல்லலாம் என்று காங்கிரஸார் காரணங்களைத் தேடவேண்டியிருக்கும்.


பி.அருள், கடலூர்.

மத்தியில் இன்றைய காங்கிரஸ் அரசு?

செங்கோட்டையில் இருந்து வெளியேற அது கவுண்ட் டவுனில் இருக்கிறது. விரைவில் வெளியேறலாம்.


அ.ரேவதி, சென்னை-2.

இனி 108க்குப் பேசினால் ஆம்புலன்ஸ் இலவசமாமே?

வரட்டும். தனியார் மருத்துவமனைகளின் பகல் கொள்ளைகள் குறையும். சில வாரங்களுக்கு முன்பு உறவினர் ஒருவருக்காகத் தனியார் ஆம்புலன்ஸை அழைத்தோம். சிறு தூரம், சிறு நேரக் காத்திருப்பு. 2600 ரூபாய் பிடுங்கிவிட்டார்கள். இவர்களது கொட்டம் அடங்க வேண்டாமா?

19 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
12 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
05 September 2008 ஜூனியர் கேள்வி-பதில்
29 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
22 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
15 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
08 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
01 August 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 July 2008 ஜூனியர் கேள்வி-பதில்
27 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
20 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
13 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
06 June 2008 ஜூனியர் கேள்வி-பதில்
30 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
23 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
16 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
09 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
02 May 2008 ஜூனியர் கேள்வி-பதில்
25 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
18 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
11 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
04 April 2008 ஜூனியர் கேள்வி-பதில்
28 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
21 March 2008 ஜூனியர் கேள்வி-பதில்
admin @ 12:00 am
Filed under: Uncategorized
Ban on liquor shops: Ramadoss advices CM

Posted on Wednesday 24 September 2008

மது விலக்கு: பெரியார், அண்ணா வழியில் செல்ல வேண்டும்:
முதல்வர் கருணாநிதிக்கு ராமதாஸ் ஆலோசனை

செஞ்சி: கள்ளுக்கடைகளை எதிர்த்து, தன் தோட்டத்து தென்னை மரங்களை வெட்டிய பெரியாரின் வழியிலும், மது விலக்கு போராட்டத்திற்காக சிறை செல்வோம் என்ற அண்ணாவின் வழியிலும் தம்பி கருணாநிதி செல்லவேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

செஞ்சியில் நடந்த பா.ம.க. மகளிர் மது ஒழிப்பு மாநாட்டில் அவர் பேசுகையில்,

”தமிழகத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை குடிக்கும் பழக்கும் அதிகரித்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் குடிக்காதவர்களே இல்லை என்ற அவல நிலை உருவாகும். சமுதாயம் அழிவை நோக்கி செல்வது வேதனையாக இருக்கிறது.

வருமானத்தை எதிர்பார்க்காமல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகள் நடந்து வருகிறது.

இவர்களது வழிகாட்டியான அண்ணா, கடந்த 1968இல் முதல்வராக இருந்த காலகட்டத்தில் நடந்த அகில இந்திய பொது மதுவிலக்கு மாநாட்டில் பேசும்போது, ‘மது விலக்கு தோல்வியடைந்து விட்டதாக சிலர் கூறுகின்றனர். சமூக பொருளாதாரத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது அதற்கு பின்னால் தாய்மார்கள், குழந்தைகள் அழுகிற காட்சிதான் என் கண் முன் நிற்கிறது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று மது விலக்கு போராட்டம் நடத்துவோம். சட்டத்தை மீறுவோம். சிறை செல்வோம்’ என்றார்.

கள்ளுக்கடைகள் கூடாது என்று பெரியார் தனது தோட்டத்தில் இருந்து 500 தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.

நாகம்மை, பெரியாரின் தங்கை கண்ணம்மா ஆகியோரின் தலைமையில் மகளிர் போராட்டம் நடந்தது. 1971இல் மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள். இப்போது மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அண்ணாவின் தம்பி கருணாநிதி, நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்” என்றார்.

admin @ 11:37 pm
Filed under: news