Varadharajan wants TN govt., to extent time for Patta

Posted on Thursday 11 September 2008

பட்டா வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்: வரதராஜ‌ன் கோரிக்கை 
 
சென்னை: புற‌ம்போ‌க்கு வீட்டுமனை பட்டா வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
 
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

‘தமிழகத்தில் சுமார் 20 லட்சம் ஏழை, எளிய மக்கள் வீட்டுமனை பட்டா மற்றும் மனை இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள். சுமார் 15 லட்சம் பேர் மனை பட்டா கேட்டு, மாவட்ட ஆ‌‌ட்‌சிய‌ர்களிடம் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.

வீட்டுமனை பட்டா கேட்டு பல்வேறுகட்ட இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால், 10 ஆண்டுகளுக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன் பின்னர், பட்டா வழங்குவதற்கான நிபந்தனைகளை தளர்த்தியும், காலக்கெடுவை நீடித்தும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்பேரில், பல லட்சம் குடும்பத்தினருக்கு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் பல லட்சம் பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டியுள்ளது.

இந்நிலையில், பட்டா அளிப்பதற்கான தளர்வு உத்தரவு வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கும் வரையில், அரசு உத்தரவின் காலத்தை நீடித்து உத்தரவிட வேண்டும்” எ‌ன்று கூறியுள்ளார். 
 

admin @ 3:01 am
Filed under: news
Left wants to start Winter Parliament session immediatly

Posted on Tuesday 9 September 2008

நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும்:
குடியரசுத் தலைவரிடம் இடதுசாரிகள் மனு

டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரை உடனே கூட்டும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடும்படி குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை நேரில் சந்தித்து இடதுசாரி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பல தகவல்களை மத்திய அரசு மறைத்துள்ளது. இதுபற்றி விவாதிக்க நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரை உடனே கூட்டுவது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட், இ.கம்யூனிஸ்ட், ஆர்.எஸ்.பி., பார்வர்டு பிளாக் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவற்றின் நாடாளுமன்றத் தலைவர்கள் நேற்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலைச் சந்தித்து இதுகுறித்து முறையிட்டனர்.

அப்போது, அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலன் என்கிற முறையில் நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டுவது தொடர்பாக தான் தலையிடுவேன் என்று பிரதிபா கூறியதாக அவரைச் சந்தித்துப் பேசிய தலைவர்கள் கூறினர்.

மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டவர்கள் நிருபர்களிடம் பேசுகையில்,

”நாடாளுமன்றத்தைக் கூட்டினால் எவ்வளவோ விஷயங்களை விவாதிக்கலாம்.
இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், பணவீக்கம், ஒரிசா மற்றும் பல இடங்களில் கிறிஸ்தவர்மீது நடத்தப்பட்டு வரும் வன்முறைத் தாக்குதல்கள் என விவாதிக்க நிறைய பிரச்னைகள் உள்ளது.

ஆனால் ஒரு கூட்டத்தொடரையே ரத்து செய்திருக்கிறது மத்திய அரசு. இது தொடர்பாக அரசு கூறப் போவதை நாடே எதிர்பார்த்துள்ளது. மழைக்காலத் கூட்டத்தொடர் கூட்டப்படாமல் போவது சுதந்திர இந்தியாவில் இதுதான் முதல்முறை. நாடாளுமன்ற மரபை அரசு திட்டமிட்டே மீறுவதாக நாங்கள் கருதுகிறோம்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தான் கொடுத்த உறுதிமொழிகளை எல்லாம் பிரதமர் மீறிவிட்டார். சில முக்கியத் தகவல்களை மறைத்தது அதைவிட மோசமான் ஒன்றாகும். இது சாதாரண விஷயமல்ல.
 
நாட்டின் இறையான்மை, வெளியுறவுக் கொள்கையை நாமே நிர்ணயித்துக்கொள்ள உள்ள உரிமைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய ஒன்று. நாடாளுமன்றம் கூட்டப்படாததால், இவ்விஷயங்களுக்கு அரசையே பொறுப்பாக்கும் தங்களது அடிப்படை உரிமையை மக்கள் பறிகொடுத்து நிற்கின்றனர். இந்த விவரங்கள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ளோம்” என்றனர்.

ஓராண்டில் 100 நாள்கள் நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும் என்று தான் அளித்த உறுதிமொழியை மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அப்பட்டமாக மீறுவதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

இந்த நிலையில், நாடாளுமன்ற அவையின் பொதுச் செயலாளர் அக்னி ஹோத்ரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி (நவம்பர் 21 வரை) நாடாளுமன்றத்தைக் கூட்ட குடியரசுத் தலைவர் உத்தவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

admin @ 8:26 pm
Filed under: news
Marxist ask, Diesal supply without demand

Posted on Wednesday 27 August 2008

தட்டுப்பாடின்றி டீசல்!: வரதராஜன் வ‌லியுறு‌த்‌தல்

சென்னை: தமிழகத்தில் தட்டுப்பாடி‌ன்‌றி டீசல் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘டீசல் தட்டுப்பாடு சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறங்களிலும் தமிழகம் முழுவதும் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

மத்திய அரசோ, எண்ணெய் நிறுவனங்களோ இந்தத் தட்டுப்பாடு நீங்க உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய, மாநில அரசின் விளக்கங்கள் பிரச்னைக்குத் தீர்வாக அமையவில்லை.

மாநில அரசு, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தும் இதுவரை பிரச்னை தீர அவசர நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

எனவே மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் தமிழகத்தில் தட்டுப்பாடின்றி டீசல் கிடைக்க தேவையான அளவு டீசல் உடனடியாக வழங்கிட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும், மாநில அரசு அதனை உறுதிப்படுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது’ எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

admin @ 11:23 pm
Filed under: news
Left yet not withdraw support to DMK govt: N Varadharajan

Posted on Wednesday 27 August 2008

தி.மு.க அரசுக்கு ஆதரவு வாபஸ் இல்லை: என்.வரதராஜ‌‌ன்
 
திண்டுக்கல்: தி.மு.க அரசுக்கு அளித்துவரும் ஆதரவை வாபஸ் பெறவில்லை. ஆனால் அக்கட்சியின் நிலைப்பாட்டில் இருந்து முரண்பட்டு நிற்கிறோம் என வரதராஜன் கூறினார்.
 
மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் திண்டுக்கல்லில் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

”அரசியல் ரீதியாக தி.மு.க.வில் இருந்து நாங்கள் மாறுபட்டு நிற்கிறோம். காங்கிரஸ், பா.ஜ. கட்சிகளுடன் உறவில்லை. அவற்றுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுடனும் கூட்டணி இல்லை.

தமிழகத்தில் 3ஆவது அணியை ஏற்படுத்த மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் விரைவில் சந்திக்க உள்ளோம். விலைவாசி உயர்வு, மதவெறி, அணுசக்தி ஒப்பந்தம், அரசியல் சட்டத்தை வளைக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் ஆகியவற்றை முன்நிறுத்தி 3ஆவது அணிக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும்.

அணிக்கு தலைமை யார் என்று இப்போதே சொல்ல முடியாது. தி.மு.க. என்ன செய்தாலும் குறை சொல்வதல்ல எங்கள் நோக்கம்.

ஜனநாயகரீதியில் சில தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம். தி.மு.க அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவில்லை. தற்போதைய நிலையில் முரண்பட்டு நிற்கிறோம்” எ‌ன்று கூ‌றினா‌ர். 

admin @ 1:42 am
Filed under: news
Left has decided to go out from alliance: Karunanidhi

Posted on Friday 22 August 2008

கூட்டணியில் இருந்து விலக மார்க்சிஸ்ட் முடிவு: கருணாநிதி கருத்து

சென்னை: தி.மு.க. தோழமை கூட்டணியில் இருந்து விலக மார்க்சிஸ்ட் கட்சியினர் ஏற்கனவே திட்டமிட்டு விட்டார்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில்,

கேள்வி: ‘கர்நாடகம், இமாசலப் பிரதேசம், ஜார்கண்ட் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் கூட்டணியின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் காங்கிரஸ் கட்சி மண்ணைக் கவ்வியுள்ளது என்பது வரலாறு; அது போல வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி தொடருமானால் அதே மண்ணைக் கவ்வும் நிலை தான் அவர்களுக்கும் ஏற்படும். காங்கிரஸ் என்கிற மூழ்கும் கப்பலில் தி.மு.க. பயணம் செய்ய விரும்பினால், அது அவர்களின் முடிவு’ என்று மார்க்சிஸ்ட் தலைவர் என். வரதராசன் அரசியல் ஆரூடம் கணித்துள்ளாரே?

பதில்: காங்கிரஸ் என்பது மூழ்கும் கப்பல் என்பது தெரிந்த பிறகும்- அணு ஒப்பந்தம் நிறைவடையும் வரையில் அந்த மூழ்கும் (?) கப்பலை விட்டு இறங்காமல் இருப்பதற்காக எத்தனை முறை டெல்லியிலே காங்கிரஸ் தலைவர்களுடன் கம்யூனிஸ்ட் உயர்மட்டத் தலைவர்கள் ‘சம்பாஷணை’ நடத்தினார்கள் என்பதும்; எத்தனை முறை சென்னைக்கு ‘விஜயம்’ செய்தார்கள் என்பதும்; நாடும் ஏடும் நன்கு அறிந்த ரகசியங்களாயிற்றே! அப்போதெல்லாம் மாநிலங்கள் சிலவற்றில் காங்கிரஸ் தோற்றது இவர்கள் கவனத்துக்கு வரவில்லையா? சில மாநிலங்களில் காங்கிரஸ் தோற்றது தான், மார்க்சிஸ்ட்கள் விலகுவதற்கு உண்மையான காரணமா? அணு ஒப்பந்தம் என்று கூறியதெல்லாம் அதற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு காரணமா?

அமைச்சரும், கழகப் பொருளாளருமான ஆர்க்காடு வீராசாமியின் கம்யூனிஸ்டு பற்றிய பேச்சுக்கு நான் மறுப்பு தெரிவித்து விளக்க அறிக்கை வெளியிட்ட பிறகும்; ‘காங்கிரஸ் கப்பலுடன் சேர்ந்து கழகம் மூழ்கி விடப்போகிறது’ என்று தோழர் வரதராசனைப் போன்றவர்கள் ‘ஆரூடம்’ கணிப்பதைப் பார்க்கும்போது, அவர்கள் தி.மு.க. தோழமை அணியில் இருப்பதில்லையென்று ஏற்கனவே திட்டமிட்டு விட்டார்கள் என்பதும்;

அதனால்தான் ஒரு மாத காலத்துக்கு முந்தியே அவர்கள் ஏடுகளிலும் மேடைகளிலும் தி.மு.க. எதிர்ப்புப் பிரசாரத்தை மெல்ல மெல்லத் தொடங்கி விட்டார்கள் என்பதும்; தெளிவாகிறது!.

எது, எப்படியிருப்பினும் காங்கிரஸ் கப்பலில் ஏறி தி.மு.க. மூழ்கி விடும் என்ற வரதராசனின் ஆரூடத்தை; என்னைப் பொறுத்தமட்டில் ‘அருளாசி’யாகவே கருதிக் கொள்கிறேன். எப்படியோ சுருண்டு கிடந்த ‘சூழ்ச்சித் திரை’ விரிந்து விட்டதைக் கண்ட பிறகாவது விழிப்போடிருப்போம் என்று பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அதன் பிறகு 1999இல் அதே பா.ஜ.க.வுடன் இணைந்து மத்திய அரசில் இணைந்து ஆட்சி நடத்தியது தி.மு.க. என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஒருவர் சொல்லியிருக்கிறாரே? பா.ஜ.க.வுடன் மார்க்சிஸ்ட் கட்சி எந்தக் காலத்திலும், எந்த மாநிலத்திலும் உறவு கொண்டது உண்டா, இல்லையா?

பதில்: இந்தக் கேள்விக்கு இப்போது நான் நேரடியாக பதில் அளிப்பதை விட, 9.3.2000 அன்று சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றியபோது, நான் பேசிய ஒரு குறிப்பிட்ட பகுதியை இங்கே விளக்கினால், அதுவே இந்தக் கேள்விக்குப் பொருத்தமான பதிலாக அமையுமென்று கருதுகிறேன்.

அந்தப் பகுதி:

கருணாநிதி: ”1967ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில் தேர்தல் முடிவுக்குப் பிறகு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களிலும் அகாலி தளம், பாரதிய கிராந்தி தளம், ஜனசங்கம் அடங்கிய கூட்டணி அரசில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகித்தது. ஆர்.எஸ்.எஸ். கட்சியினுடைய நிழல் என்று சொல்லப்படுகின்ற ஜனசங்கம், பாரதிய கிரந்தி தளம், அகாலி தளம் ஆகிய இந்தக் கட்சிகள் எல்லாம் பங்கு பெற்ற அரசில் சி.பி.ஐ. கட்சி அங்கம் வகித்தது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த அணியிலே பங்கு பெற மறுத்து விட்டது. ஆனால் அந்த அரசுகளுக்கு நிபந்தனையோடு கூடிய ஆதரவை அளிக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டது.

கே.சுப்பராயன்: முதல்- அமைச்சர் சொல்வது உண்மை தான். ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய ஒரு மாநிலக் குழு தீர்மானித்து, அப்படி பங்கு பெற்றது தவறு என்று மத்திய தலைமை சுட்டிக்காட்டியிருக்கிறது. எனவே அதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய அதிகார பூர்வமான கருத்தாக எடுத்துக் கொள்ள இயலாது.

கருணாநிதி: நான் அந்த அரசில் அங்கம் வகித்தார்கள் என்று தான் சொன்னேன். அது மாநிலக் குழுவா, மத்தியக் குழுவா என்பதெல்லாம் அல்ல. அப்படிப்பட்ட அரசில் ஜனசங்கம் இருந்த அரசில் சி.பி.ஐ. அங்கம் வகித்தது என்பது தான்.

பிறகு, 1977இல் நடந்த தேர்தலில் மத்தியில் மொரார்ஜி தேசாய் தலைமையிலே ஜனதா அரசு அமைந்தது. ஜனதாவிலே இடம் பெற்ற கட்சிகளில் ஒன்று ஜனசங்கம். அந்த அரசில் வாஜ்பாய், அத்வானி, நானாஜி தேஷ்முக் ஆகியோர் இடம் பெற்றிருந்தார்கள். மார்க்சிஸ்ட் கட்சி வெளியே இருந்து அரசுக்கு ஆதரவு கொடுத்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.

1989-90இல் வி.பி. சிங் தலைமையிலே மத்தியில் ஆட்சி. அப்போது சி.பி.எம், பா.ஜ.க. இரண்டுமே வெளியே இருந்து வி.பி. சிங் ஆட்சியை ஆதரித்தார்கள்.

இவ்வாறு சட்டப் பேரவையில் அப்போதே நான் பேசியிருக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

admin @ 8:57 pm
Filed under: news
Varadharajan warns DMK

Posted on Thursday 21 August 2008

மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் தி.மு.க பயணிக்கிறது:
மார்க்சிஸ்ட் செயலாளர் என். வரதராஜன் எச்சரிக்கை

சென்னை: மூழ்கிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் என்னும் கப்பலில் பயணிக்க தி.மு.க. விரும்புகிறது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று  வெளியிட்ட அறிக்கையில்,

‘தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி 20ஆம் தேதி நடந்த  நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘அணு ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காணாமல் போவார்கள்’ என்று இடதுசாரிகள்மீது நெருப்பை உமிழ்ந்திருக்கிறார்.

கூடங்குளம் அணுமின் நிலைய ஒப்பந்தம் ஒன்றுபட்ட சோவியத் யூனியனுடன் போடப்பட்டது. அதில் சர்வதேச அரசியல் நிபந்தனை ஏதும் இல்லை. அதற்கு தேவையான யுரேனியத்தையும் ரஷ்யா அளித்து வருகிறது. இதற்கும் அமெரிக்காவோடு போடப்பட்டுள்ள 1 2 3 ஒப்பந்தத்திற்கும் சம்பந்தமில்லை என்பது ஏனோ ஆற்காடு வீராசாமிக்குப் புரியவில்லை.

எங்கள் நிலைக்கும் சீன அரசுக்கும் தொடர்பில்லை. சர்வதேச அணுசக்தி முகமையில் இந்தியாவை சீன அரசு ஆதரித்துள்ளது.

2007ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதம் நடந்தபோது பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் சீனாவோடு சேர்ந்து சதி செய்கிறார்கள் என்று அர்த்தமாகுமா?

சேது சமுத்திரத் திட்டத்தில் வகுப்புவாதிகளுக்கு எதிராக உறுதியான நிலையெடுக்காத காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்தான் தி.மு.க. அமைச்சர்கள் உள்ளனர். 2004க்குப் பிறகு இடம்பெற்றுள்ள ஐ.மு.கூ. அரசு கடைப்பிடித்த தவறான கொள்கைகளால், பல மாநிலங்களில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்துள்ளது. இத்தகைய காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்து நிற்கும் தி.மு.க. இடதுசாரிகள்மீது குற்றம் சாட்டுவது வியப்பாக உள்ளது.

 கடந்த நான்காண்டுகாலத்தில் திமுகவும் இடம்பெற்றுள்ள ஐ.மு.கூ. அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் கர்நாடகம், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட் உள்பட சில மாநிலங்களில் காங்சிரசும், அதன் கூட்டணியினரும் மண்னைக் கவ்வியுள்ளனர் என்பது வரலாறு. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி தொடருமானால் இதே நிலைதான் அவர்களுக்கு ஏற்படும்.

அமெரிக்க நலனுக்கு ஆதரவாக நிற்கும் காங்கிரசோடு தி.மு.க. இணைந்து நிற்கிறது. காங்கிரஸ் என்னும் மூழ்கும் கப்பலில் பயணம் செய்ய தி.மு.க. விரும்பினால் அது அவர்களது முடிவு’ எனக் கூறியுள்ளார்.

admin @ 10:49 pm
Filed under: news
Arcot Veerasamy statement is not right, Left says

Posted on Thursday 21 August 2008

n.varatharajan.jpgஆற்காடு பேச்சு அரசியல் அநாகரிகம்: என். வரதராஜன்

சென்னை: இடதுசாரிகளைப் பற்றி அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியவை அரசியல் அநாகரிகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் கூறினார்.

இடதுசாரிகள் பற்றி தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறிய கருத்துக்கள் குறித்து செய்தியாளர்களிடம் என். வரதராஜன் பேசுகையில்,

”தி.மு.க. அமைச்சர் ஆற்காடு வீராசாமி கம்யூனிஸ்ட் கட்சிகள் குறித்து பேசியிருப்பது அபத்தமானது. அரசியல் நாகரிகமற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கலைஞரின் புத்தக வெளியீட்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சி பங்கேற்றது. அப்போதெல்லாம் மார்க்சிஸ்ட் கட்சி தேச பக்தி கொண்ட கட்சியாக தி.மு.க.வுக்கு தெரிந்திருக்கிறது.

கருத்து வித்தியாசம் வந்தவுடன் எடுப்பேன், கவிழ்ப்பேன் என்ற நிலையில் தி.மு.க. அமைச்சர் பேசுவது அழகல்ல” என்றார்.

admin @ 2:30 am
Filed under: news
Somnath to continue…: UPA gives full support

Posted on Thursday 24 July 2008

சபாநாயகராக சோம்நாத் தொடருவார்:
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆதரவு

டெல்லி: மக்களவைத் தலைவராக சோம்நாத் சாட்டர்ஜி தொடர்ந்து பதவி வகிப்பார் எனத் தெரிகிறது. மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அவரை பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் நேற்று சந்தித்துப் பேசினர். மக்களவைத் தலைவர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டாம் என்று அப்போது அவர்கள் சோம்நாத் சாட்டர்ஜியை கேட்டுக்கொண்டனர்.

மக்களவையில் 22ஆம் தேதி மத்திய அரசு  மீதான  நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்த நிலையில், அதற்கடுத்த தினம் கூடிய மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ குழு சோம்நாத் சாட்டர்ஜியை கட்சியில் இருந்து நீக்கியது.

அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்ற மார்க்சிஸ்ட் கட்சி, சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை பதவியை விட்டு விலகச்சொன்னது. கட்சியின் கோரிக்கையை அவர் நிராகரித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தலைமையேற்று வழிநடத்தினார்.

இதனால், ‘கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக’ கூறி மார்க்சிஸ்ட் கட்சி அவரை நீக்கியது.

இந்நிலையில் சோம்நாத் சாட்டர்ஜிக்கு தனது முழு ஆதரவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நேற்று தெரிவித்தது. மக்களவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டது.

சோம்நாத் சாட்டர்ஜி இல்லத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலை சென்றார். இருவரும் சுமார் 20 நிமிடங்கள் பேசினர். பின்னர் வெளியே வந்த பிரதமர் நிருபர்களிடம் எதுவும் கூறவில்லை என்றாலும் சோம்நாத் சாட்டர்ஜியின் முகத்தில் உற்சாகம் மிகுந்திருந்தது.

அதன்பிறகு லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான  ராம்விலாஸ் பாஸ்வான் சந்தித்தார். அவர் கூறுகையில், ‘சாட்டர்ஜிக்கு மக்களவையின் முழு ஆதரவும் இருக்கிறது’ என்றார்.

அதன்பின்னர் முலாயம் சிங், அமர்சிங், மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், சிவராஜ் பாட்டீல், சைபுதீன் சோஸ், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரும் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் சோம்நாத் சாட்டர்ஜி பதவியில் நீடிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு இன்று 79 ஆவது பிறந்தநாள். இதையொட்டியும் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி அவரை குளிர வைத்துள்ளனர்.

admin @ 9:54 pm
Filed under: news
CPM pull out Somnath: Opp., parties start expelling rebel MPs

Posted on Wednesday 23 July 2008

மத்திய அரசு வெற்றி: கட்சிமாறிகளை களையெடுக்கும் எதிர்க்கட்சிகள்!

டெல்லி: மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி எதிராக, மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட உறுப்பினர்கள் மீது எதிர்க்கட்சிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

நாடாளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

கட்சியின் நிலைக்கு எதிராக அவர் செயல்பட்டார் எனக் கூறி அவரை அவர் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் குழு நீக்கி உத்தரவிட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து 22ஆம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றிபெற்றது. ஆனால் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியை பதவி விலகுமாறு மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி இருந்தது. ஆனால் அவரோ தான் எல்லோருக்கும் நடுநிலையானவன் என்று கூறி பதவி விலக மறுத்துவிட்டார். மத்திய அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பையும் நல்லபடியாக முடித்துவிட்டார்.

இந்நிலையில், அவர் கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிராக நடந்து கொண்டதாகக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரிக்க மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு நேற்று டெல்லியில் கூடியது. இக்கூட்டத்தில் பொதுச்செயலர் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, எம்.கே. பாண்டே, எஸ்.ஆர். பிள்ளை, பிருந்தா காரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், சோம்நாத் சாட்டர்ஜி கட்சியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. கட்சியின நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் நடந்து கொண்டமைக்காக கட்சி சட்டம் 19(13) பிரிவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டிருந்தது.

கட்சியில் நீக்கப்பட்டது குறித்து கருத்துக் கூற சோம்நாத் சாட்டர்ஜி மறுத்துவிட்டார்.

மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் நாடாளுமன்ற சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜி தன்னுடையப் பணியைத் தொடர தங்கள் கட்சி விரும்புவதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

சோம்நாத் சாட்டர்ஜி மீதான நடவடிக்கை காலம் கடந்த நடவடிககை என்று திரிணாமூல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கருத்து கூறியுள்ளார். ஆதரவு வாபஸ் பட்டியலில் அவர் பெயர் சேர்க்கப்பட்டதுமே அவர் பதவி விலகி இருக்கவேண்டும். எதற்காக அவர் பதவியில் தொடர்ந்தார் என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி காங்கிரசுக்கு ஆதரவாக செயல்பட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் மீதும் அந்தந்தக் கட்சிகளின் தலைவர்கள் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.

காங்கிரசுக்கு ஆதராவாக செயல்பட்ட எம்.பி.,க்கள் 8 பேரை பா.ஜ.க. தலைமை நீக்கியுள்ளது. அதில் 4 பேர் நம்பிக்கை வாக்கெடுபபு அன்று அவைக்கு வரவில்லை.

பிரிஜ்பூஷண் ஷரண் சிங், மஞ்சுநாத், சந்திரபான் சிங், எச்.டி. சாங்கிலியானா, மனோரமா, ஹரிபவ் மாதவ், பாபு பாய் கட்டாரா, சோமாபாய் படேல் ஆகிய 8 பேர் பா.ஜ.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., க்கள் ஆவர்.

இதேபோல் மத்தியஅரசை ஆதரித்து வாக்களித்த தெலுங்குதேச எம்.பி. ஜெகந்நாதம் நீக்கப்பட்டுள்ளார்.

அரசுக்கு ஆதரவாக வாக்களித்த மதச்சார்பற்ற ஜனதாதள எம்.பி., சிவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார் கட்சித்தலைவர் தேவகெளடா.

admin @ 7:57 pm
Filed under: news
Trust of vote victory: CM feels happy

Posted on Wednesday 23 July 2008

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி: சாதனைக்கு கிடைத்த வெற்றி- கருணாநிதி பேட்டி

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு பெற்றுள்ள வெற்றி, 4 ஆண்டுகாலம் மக்களுக்கு ஆற்றிய தொண்டுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதும், சென்னை கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதி வீட்டு முன்பு கூடியிருந்த தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.

இதன்பின்பு முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அவர் அளித்த பதிலும் வருமாறு :

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் வெற்றி குறித்து உங்கள் கருத்து என்ன?

நான்காண்டு காலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி மக்களுக்கு ஆற்றிய தொண்டு, நிறைவேற்றிய சாதனைகள், திட்டங்கள் இவைகளுக்கு கிடைத்த வெற்றி இது என்ற மகிழ்ச்சி எனக்கு.

இந்த வெற்றியின் மூலம் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படுகிறதா?

மன்மோகன்சிங் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானம், அவர்களுக்கு ஆதரவாக நம்பிக்கை இருக்கிறது என்ற அளவில் நிறைவேறி இருப்பதைக் கண்டு நாங்கள் அது சேதுசமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவு என்று சொன்னால் நீதிமன்றத்தில் இருக்கின்ற வழக்கை அது பாதிக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால் நான் இப்போது அதைப்பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை.

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் நிறைவடையுமா?

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தில் எவ்வப்போது என்னென்ன பணிகளை நிறைவேற்றுவது என்பதற்கான காலவரையறை வகுத்திருப்பதையே நான் பலமுறை எடுத்துக் காட்டியிருக்கிறேன். அதற்கான அலுவலகமே, திறக்கப்பட்டு விட்டதும் ஏடுகளில் வந்துள்ளது. இவ்வளவிற்கும் பிறகு சிலர் அந்த திட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை என்று பேசிக்கொண்டிருக்கிறார்கள். அது தவறு.

ஒகேனக்கல் திட்டத்தை கர்நாடக அரசிலே உள்ள எடியூரப்பா சட்ட விரோதம் என்று சொல்லியிருக்கிறாரே?

அது சட்டவிரோதமல்ல, அனைத்தையும் ஆய்வு செய்து ஏற்கனவே அது முடிவு செய்யப்பட்டுவிட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு இடதுசாரிகளுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

நேற்று பா.ஜ.க. தலைவர் அத்வானி இந்த தீர்மானத்தின் மீது பேசிய பேச்சை அவர்கள் கூர்ந்து படித்திருப்பார்கள் என்று கருதுகிறேன். அத்வானி பேசும்போது நாங்கள் ஆட்சிக்கு வந்தாலும் இதே அணுசக்தி ஒப்பந்தத்தை செய்து கொள்வோம் என்று சொல்லியிருக்கிறார். இதில் இருந்து அவர்களை அடையாளம் கண்டுகொண்டு இருப்பார்கள் என்று கருதுகிறேன்.

இவ்வளவு பிரச்னைகளுக்குப் பிறகும் மத்திய அரசு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

இருக்கிறது.

நீங்கள் டெல்லிக்கு செல்கின்றீர்களா?

நாளை செல்கிறேன்.

இடதுசாரி இயக்கங்கள் தமிழ்நாட்டில் இனி என்ன நிலை எடுப்பார்கள்?

தமிழ்நாட்டில் அதைப்பற்றி எந்த பிரச்னையும் இல்லை என்பது என்னுடைய நம்பிக்கை.

நாளை டெல்லி செல்லும்போது பிரமரிடம் தமிழக மீனவர்கள் பிரச்சினை பற்றி நேரில் பேசுவீர்களா?

நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அத்தனைபேரும் நேரில் பிரதமரை சந்தித்து மீனவர்கள் பிரச்னை பற்றி பேசியிருக்கிறார்கள். நானும் பேசுவேன்.

சோனியாகாந்திக்கும், பிரதமருக்கும் வாழ்த்து தெரிவித்துவிட்டீர்களா?

தெரிவித்துவிட்டேன்.

இந்த வெற்றிக்குப் பிறகு கனிமொழிக்கு மந்திரிசபையில் இடம் வேண்டும் என்று கேட்பீர்களா?

இப்படிப்பட்ட அசட்டுக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

பலகோடி ரூபாய்கள் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கியதாக அவையிலேயே காட்டியதைப்பற்றி?

அப்படியெல்லாம் செய்தவர்கள் யார் என்று தெரியவில்லை. அப்படி செய்ததால்தான் அவர்கள் தோற்றுவிட்டார்கள்.

இது ஜனநாயக படுகொலை இல்லையா? இதற்காக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்படுமா?

சபாநாயகரே விசாரணை பற்றி சொல்லியிருக்கிறாரே. பணம் வாங்கப்பட்டிருந்தால் அது ஜனநாயக கொலைதான்.

admin @ 3:54 am
Filed under: news