Bangaluru shaked by little EQ

Posted on Friday 12 September 2008

பெங்களூரு நடுங்கியது

பெங்களூரு: பெங்களூரு மற்றும் அதன் புறநகர் பகுதியில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கெங்கேரி, கோடிசிக்கனஹள்ளி, எச்.எஸ்.ஆர். லே-அவுட், ஜே.பி. நகர், மடிவாளா, பொம்மனஹள்ளி ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

காலை 8.50 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 1.03ஆக பதிவானது. சுமார் 5 வினாடிகள் இந்த நிலநடுக்கம் நீடித்தது.

8.50 மணியளவில் உண்டான பயங்கர வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதில் கெங்கேரி பகுதியில் சில வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

admin @ 1:32 am
Filed under: news
Severe search for terrorists in TN

Posted on Sunday 3 August 2008

தீவிரவாதிகள் பதுங்கலா?:
தமிழகம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை

சென்னை: சுதந்திர தினத்தன்று (ஆகஸ்ட் 15) வெடிகுண்டு வெடிப்புகளை நிகழச் செய்யும் திட்டத்துடன் 15 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்தது தமிழகம் முழுக்க தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி, சுதந்திர தினத்தன்று வெடிகுண்டுகளால் பல இடங்களை தகர்க்க ‘இறைவன் ஒருவனே’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். இதுதொடர்பாக நெல்லையில் அப்துல் கபூர், ஹீரா மற்றும் மதுரையில் முஸ்தபா ஆகிய மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர்கள் கொடுத்தத் தகவலின்படி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அலி அப்துல்லாவும் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபடியே சதித்திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

எனவே, அலி அப்துல்லா, அப்துல் கபூர், ஹீரா மூவரையும் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்தனர்.

பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை, நெல்லை ஆட்சியர் அலுவலகங்கள், சென்ரல் ரயில் நிலையம், மதுரை மீனாட்சி ஆலயம் உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களை ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று  குண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும், தாங்கள் காவல்துறையில் சிக்கினால் தங்கள் கூட்டாளிகள் இந்த சதித்திட்டத்தை நிறைவேற்றுவவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

அலி அப்துல்லாவின் கூட்டாளிகள் 15 பேர் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவில் இமாம் அலி காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் கோபத்தில் இருந்த அவரது கூட்டாளிகள் அலி அப்துல்லாவுடன் கூட்டணி  சேர்ந்து முக்கிய இடங்களில் வெடிகுண்டுவைக்க தயாராகி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அலி அப்துல்லாவின் கூட்டாளிகள் மதுரை, திருச்சி, திருவனந்தபுரம், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டையை தமிழகம் முழுக்க காவல்துறை நடத்திவருகிறது.

தீவிரவாதிகளைப் பிடிக்க மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த 7 தனிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

admin @ 9:53 pm
Filed under: news
Terrorists says, plan to attack Tamilnadu twice

Posted on Tuesday 29 July 2008

தமிழகத்தில் 2 கட்ட தாக்குதலுக்குச் சதி!: சென்னை, நெல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம்

சென்னை: தமிழ்நாட்டில் 2 கட்டமாகத் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியிருந்ததாக பிடிபட்ட தீவிரவாதிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

பெங்களூரு, ஆமதாபாத் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த தொடர் வெடிகுண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து, முதல்வர் கருணாநிதி ஆணையின்படி தமிழகத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இந்தச்சோதனையில் கடந்த சனிக்கிழமையன்று நெல்லையில் அப்துல் கபூர் என்கிற தீவிரவாதியும், சென்னையில் ஹீராவும் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உதவியதாக நெல்லையைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் அன்வர் பாஷாவும் கைதானார்.

அப்துல் கபூரிடன் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை அண்ணாமேம்பாலம் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றை வெடிகுண்டு வைத்து தகர்க்க சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தெரிய வந்தது.

இதேப்போல் ஹீராவிடம் நடத்தப்பட்ட விசாரணயில், ஆகஸ்ட் 1ஆம் தேதி மற்றும் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று சென்னை மற்றும் நெல்லையில் 2 கட்டமாக  குண்டு வைத்து  தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தோம். அப்துல் கபூர் ஏற்கனவே எங்கள் ‘இறைவன் ஒருவனே’ இயக்கத்தில் சேர்ந்து வெடிகுண்டு தயாரிப்பை கற்றுத் தேர்ந்தவர். அதனால் அவரை வைத்து ஆகஸ்ட் 1இல் முதல்கட்டத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தோம்.

29ஆம் தேதி எல்லோரும் ஒனறு கூடி பேச இருந்தோம். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்கட்டமாக சென்னை அண்ணா மேம்பாலம் அல்லது சென்னை சென்ரல் ரயில் நிலையத்தை குண்டு வைத்து தகர்க்க நினைத்திருந்தோம். 2ஆம் கட்டமாக ஆகஸ்ட் 15இல் சென்னை மற்றும் நெல்லையில் குண்டு வைக்க திட்டமிட்டிருந்தோம். இந்தத் திட்டங்கள் எல்லாம் புழல் சிறையில் உருவானவை என்று கூறியுள்ளார்.

இந்த குண்டுவெடிப்பு சதியின் பின்னணியில் இருப்பவர்களை தமிழக காவல்துறை தீவிரமாகத் தேடி வருகிறது.

admin @ 9:55 pm
Filed under: news
Plan to attack Anna flyover: Three held

Posted on Monday 28 July 2008

சென்னை அண்ணா மேம்பாலத்தை, 3 இரயில்களை தகர்க்க சதி:
சென்னையில் 3 தீவிரவாதிகள் கைது

gemini-anna-flyover.jpg

சென்னை: தமிழ்நாட்டில் வெடிகுண்டு வைக்க சதி செய்ததாக மொத்தம் 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனால் தமிழ்நாட்டுக்கு நேரவிருந்த மிகப்பெரிய ஆபத்து முறியடிக்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் கருதுகின்றனர்.

ஆயினும் தமிழகம் முழுக்க எச்சரிக்கை உணர்வுடன்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது தமிழக காவல்துறை.

பெங்களூரு, அகமதாபாத் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து தீவிர தீவிரவாதிகள் வேட்டையில் இறங்கிய காவல்துறை நெல்லையில் வைத்து அப்துல் கபூர் என்ற தீவிரவாதியை நேற்று முன்தினம் கைது செய்தது. அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிப்பிற்கான உதிரிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், கபூர் தெரிவித்த தகவல்படி திருநெல்வேலியைச் சேர்ந்த ஹீரா என்கிற செய்யது காசிம்(27), பழனியைச் சேர்ந்த உமர் (24), மண்ணடியைச் சேர்ந்த காதர் (25) ஆகிய மூவரையும் சென்னையில் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். மண்ணடியில் இவர்கள் சுற்றிவளைக்கப்பட்டனர்.

இந்தச் சதி காரணமாக தெளபீக் உள்ளிட்ட சிலரை காவல்துறை தேடிவருகின்றது.

தலைமறைவாக இருக்கும் தெளபீக்தான் இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதாக காவல்துறை கருதுகிறது. கூட்டாளிகள் மாட்டிக்கொண்டதையடுத்து அவன் வெளிநாட்டுக்கு தப்பிக்கக்கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

பிடிபட்ட தீவிரவாதிகளிடம், தீவிரமாக விசாரணை நடத்தியதில் ஆகஸ்டு 15க்கு முன்பாக சென்னை அண்ணா மேம்பாலத்தை குண்டுவைத்து தகர்க்கவும், சுதந்திர தினத்தன்று சென்னையில் இருந்து புறப்படும் மூன்று ரயில்களை தகர்க்கவும் சதித்திட்டம் தீட்டியிருந்ததாக தெரியவந்துள்ளது.

சென்னை மற்றும் தமிழகம் முழுக்க இவர்களின் கூட்டாளிகளை தேடுவதில், வெடிபொருள்களை கண்டறிவதில் தீவிரமாக இறங்கியுள்ளது தமிழக காவல்துறை.

admin @ 9:07 pm
Filed under: news
Bomb blasts, Tamilnadu alert : Terrorist held in Nellai

Posted on Sunday 27 July 2008

சுதந்திர தினத்தன்று சென்னை, நெல்லையைத் தகர்க்கத் திட்டம்: தீவிரவாதி கைது

சென்னை: சுதந்திர தினத்தன்று சென்னை, நெல்லையைத் தகர்க்க தீட்டப்பட்டச் சதித்திட்டம முறியடிக்கப்பட்டது. இதுதொடர்பாக  நெல்லையில் தீவிரவாதி ஒருவன் கைது செய்யப்பட்டான்.
 
பெங்களூரு, அகமதாபாத் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து நாடு முழுக்க காவல்துறை உஷார் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி முதல்வர் கருணாநிதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த உத்தரவைத் தொடர்ந்து தமிழகம் முழுக்க தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்நிலையில் நெல்லை அடுத்த பேட்டை பகுதியில் காவல்துறையினர் சோதனையில் அப்துல் கபூர் என்ற தீவிரவாதி பிடிபட்டார்.

39 வயதான அப்துல்கபூர் வருகிற சுதந்திர தினத்தன்று (15/08/08) சென்னையிலும் நெல்லையிலும் வெடிகுண்டுகளை வைக்க சதித்திட்டம் தீட்டிய கும்பலில் முக்கியமான நபர் என்பது தெரியவந்துள்ளது.

அவரிடமிருந்து குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கக்கூடிய வெடிகுண்டு தயாரிப்புக்கான உதிரி பாகங்கள் கைப்பற்றப்பட்டன. இவருடைய கைது மூலம் மிகப்பெரிய சதித்திட்டத்தை தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அப்துல் கபூர் கைது குறித்து தமிழக டி.ஜி.பி. அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்,

‘பெங்களூரு மற்றும் அகமதாபாத் நகரங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து,  தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி முதல்வர் ஆணையிட்டதன்பேரில் தமிழக காவல்துறை முடுக்கி ப்பட்டுள்ளது.

திருநெல்வேலி, பேட்டையைச் சேர்ந்த அப்துல் கபூர் (சேவுகானின் மகன்) என்பவர் வெடிகுண்டுகளை இயக்கும் டைமர் கருவிகளைத் தயாரித்து சென்னைக்குக் கொண்டுவர உள்ளார் என்ற தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் நெல்லை பேட்டை பகுதியில் உள்ள  மக்தூம் பள்ளி வாசல் தெருவில் உள்ள, அப்துல் கபூர் தங்கியுள்ள வீட்டில் சோதனையிட்டபொழுது வெடிகுண்டுக்கான கிளாக் மெக்கானிசம், மின்,சுற்றுக்கான வரைபடம், பேட்டரி செல்கள், இரண்டு பிளாஸ்டிக் கொள்கலன்கள் உள்பட 21 உபகரணங்களை கைப்பற்றி அப்துல் கபூரை கைது செய்தனர். இதில் சம்பந்தப்பட்ட கூட்டாளிகள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
 

admin @ 11:04 pm
Filed under: news
Ahmedabad bomb blast

Posted on Sunday 27 July 2008

குஜராத்தில் பயங்கரம், 17 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல்:
2 கார் நிறைய குண்டுகள், பலி 50 ஆனது

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நாட்டையே உலுக்கும் வகையில் 17 இடங்களில் குண்டுகள் வெடித்தன. அந்த குண்டுகள் 50 பேரின் உயிரை பலிவாங்கின. இதுபோதாது என்று குஜராத் மாநிலம் சூரத் நகரில் குண்டுகள் நிரப்பப்பட்ட 2 கார்களை காவல்துறையினர் கண்டுபிடித்து கைப்பற்றினர். குண்டுகள் வெடிக்கும்முன் அவற்றை செயலிழக்கச் செய்தனர். இதனால் பெரு ம் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் தவிர்க்கப்பட்டன.

பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை (25/07/08) 8 இடங்களில் 9 குண்டுகள் வெடித்தலில் 2 பேர் உயிரிழந்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீள்வதற்குள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 17 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 50 பேர் பலியாகினர். குண்டு வைத்த தீவிரவாதிகளை தேடு்ம் பணியில் அம்மாநிலக் காவல்துறை தீவிரமாக இறங்கியுள்ளது.

அகமதாபாத் நகரில் வெடிகுண்டு நிபுணர்களுடன் சேர்ந்து காவல்துறை தீவிர சோதனையில் ஈடுபட்டது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் தொகுதியான மணி நகரில் ஒரு குப்பைத் தொட்டியில் குண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

அம்ரைவாடியின் ரமோல் பகுதியிலும், காந்திநகர் காடியா பகுதிகளிலும் குண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

சூரத் நகரில் அரசு மருத்துவமனை அருகே மரப்பெட்டி ஒன்றில் இருந்தும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த வெடிகுண்டு மட்டும் வெடித்திருந்தால் அந்த மருத்தவமனையே தூள்தூளாகி இருக்கும் என்று காவல்துறையினர் தெரிவி்த்தனர்.

புனேகாம், வராச்சா பகுதிகளில் அனாதையாக நின்றிருந்த 2 கார்களில் கொத்துகொத்தாக இருந்த வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.

இந்தகுண்டு வெடிப்பு நிகழ்வு குறித்து அகமதாபாத் காவல்துறை இணை ஆணையர் ஆசிஷ் பாட்டியா கூறுகையில்,

”குண்டுவெடிப்பு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரித்து வருகிறோம். இந்த குண்டுவெடிப்புக்கு சிமி தீவிரவாதிகள்தான் காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த குண்டுகளை அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தி தீவிரவாதிகள் தயாரித்துள்ளனர். சில இடங்களில் காஸ் சிலிண்டர்களையும் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்” என்றார்.

admin @ 9:10 pm
Filed under: news
Banglore blasts: One more bomb defused

Posted on Saturday 26 July 2008

பெங்களூரு: மேலும் குண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது

பெங்களூரு: பெங்களூருவில் கோரமங்களா போரம் மால் அருகே இன்றும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது செயலிழக்கச் செய்யப்பட்டது.

கோரமங்களாவில் போரம் வர்த்தக வளாகத்தின் எதிர்புறம் உள்ள ஹைதராபாத் பிரியாணி ஹோட்டல் அருகே இன்று காலை 11 மணிக்கு இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்றும் போரம் மால் அருகே ஒரு குண்டு செயலிழக்கச் செய்யப்பட்ட நிலையில் இன்றும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து ஒசூர் ரோட்டில் கோரமங்களா பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மடிவாளா சில்க்போர்ட் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன. அதே போல எம்.ஜி. ரோட்டிலிருந்து மடிவாளா நோக்கி வரும் வாகனங்களும் திருப்பிவிடப்பட்டுள்ளன.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட குண்டும் நேற்று வெடித்த குண்டு வகையைச்சேர்ந்ததுதான் என பெங்களூரு காவல் ஆணையர் சங்கர் பிதாரி கூறியுள்ளார்.  

இன்றும் குண்டு கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து  நகர் முழுவதும் சோதனைகள் நடந்து வருகின்றன. இதனால்  பெங்களூருவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

admin @ 2:07 am
Filed under: news
Bangalore blast: Leaders condemns

Posted on Friday 25 July 2008

பெங்களூரு குண்டுவெடிப்பு: குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் தலைவர்கள் கண்டனம்

பெங்களூரு: பெங்களூருவில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

நேற்று மதியம் பெங்களூருவில் மதியம் ஒரு மணி அளவில் ஒரு மணி நேரத்திற்குள்ளாக நகரில் உள்ள 7 இடங்களில் 8 குண்டுகள் தொடர்ந்து வெடித்தன. இதில் ஒரு பெண் உடல் சிதறி பலியானார். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்புக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்:

நாட்டடின் அமைதியை குலைப்பதற்காக திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.

குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி:

அமைதியை குலைக்கும் வகையில் நடத்தப்பட்டிருக்கிறது இந்தத் தாக்குதல். அமைதி, ஒற்றுமையை காப்பதன் மூலம் இதை நாம் முறியடிக்கவேண்டும்.

பிரதமர் மன்மோகன் சிங்:

தீவிரவாதிகளின் இந்தச் செயல் கண்டனத்துக்குரியது. இதன்மூலம் மக்களிடம் ஒற்றுமையைக் குலைக்க முயற்சித்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்தக் கொடிய எண்ணத்திற்கு மக்கள பலியாகி விடாமல் அமைதி காக்க வேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சமும்,  காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.
 
உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல்:

அப்பாவி மக்களின் உயிர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்த குண்டு வெடிப்பு கடும் கண்டனத்திற்கு உரியது. குற்றவாளிகளைப் பிடிக்க கர்நாடக அரசிற்கு, மத்திய அரசு எல்லா உதவிகளையும் செய்யும். இதுபோன்ற சம்பவங்களால், மத்திய அரசு எடுத்து வரும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தடுக்கமுடியாது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா:

கர்நாடகத்தில் நிலவும் அமைதியைக் கெடுக்கவும், பொதுமக்களிடையே குழப்பத்தை உண்டாக்கவும் நடந்த திட்டமிட்ட சதியாகும். இதனால் பீதி அடையத் தேவையில்லை. மக்கள் வதந்திகளை நம்பாமல், அமைதி காக்க வேண்டும். மடிவாளா பஸ் நிலையப் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் பலியான பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். காயமடைந்த அனைவருக்கும் சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்:

பெங்களூரு குண்டுவெடிப்பு நிகழ்வுகளைக் கேட்டு திடுக்கிட்டேன். இத்தகையச் சம்பவங்கள் நடக்க உளவுத்துறை சரிவர இயங்காததே காரணம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
சென்னையில் நடக்கும் தென்னிந்திய டி.ஜி.பி.க்கள் மாநாட்டிற்காக நேற்று சென்னை வந்த கர்நாடக மாநில காவல்துறை டி.ஜி.பி. ஸ்ரீகுமார் கூறுகையில்,

”இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக மக்கள் தாங்கள் அறிந்ததை காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும். அது விசாரணைக்கு மிகவும் உதவியாக இருக்கும்” என்றார்.

admin @ 10:19 pm
Filed under: news
Bomb blast in Bangalore

Posted on Friday 25 July 2008

பெங்களூருவில் 7 இடங்களில் 8 குண்டு வெடிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஒரு மணி நேரத்தில் 7 இடங்களில் 8 குண்டுகள் வெடித்தன. இதில் ஒரு பெண் உடல் சிதறி பலியானார். 20க்கும் மேலானோர் காயம் அடைந்தனர். இதனால் நகரம் எங்கும் பதட்டம் பரவியது. பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், ஐ.டி. அலுவலகங்கள் மூடப்பட்டன.

தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களுருவில், ஓசூர் சாலையில் உள்ள மடிவாளா பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை மதியம் 1.40 மணிக்கு பயங்கர சத்தத்துடன் முதல் குண்டு வெடித்தது. பேருந்து நிழற்குடை இடிந்து விழுந்தது. குண்டு வெடிப்பில், பேருந்துக்காகக் காத்திருந்து பெண் ஒருவர் உடல் சிதறி பலியானார். 4 பேர் காயமடைந்தனர். பெண்ணின் பெயர் சுதா (30). அவருடைய கணவரான ரவியும் காயமடைந்தார்.

இந்த குண்டுவெடிப்பால் ஏற்பட்ட பதட்டம் தணிவதற்குள் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

மைசூர் சாலையில் நாயண்ட ஹள்ளி சிக்னல், டாடா மொபைல் - கன்கார்டு மோட்டார் நிறுவனம் அருகே, கோமங்களா ஈகிள் சாலையிலுள்ள ஹெர்குலிஸ் ஸ்போர்ட்ஸ் உள்ள பகுதி, விட்டல் மல்லையா சாலையில் உள்ள பூங்கா,  அசோக் நகரில் உள்ள லாங்க் பார்ட் சாலை, சாந்தி நஞ்சப்பா சர்க்கிள், ஆடுகோடி சலீம் கிரானைட்ட் நிறுவனம் அருகே, நஞ்சப்பா சர்க்கிள் ஆகிய இடங்களில் 8 குண்டுகள் வரை வெடித்ததாகக் கூறப்படுகிறது. சுமார் ஒருமணி நேரத்திற்குள் இந்த 8 குண்டுகள் வெடித்துள்ளன.

குண்டுவெடித்த இடங்களில் பெங்களூரு காவல் துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடித்த குண்டுகள் டைம்பாம் வகையைச் சேர்ந்தவை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த குண்டுகளில் நட்டு. போல்டுடன் ஜெலட்டின் குச்சிகள் வைக்கப்பட்டு வெடிக்க வைக்கப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பிற்கு  இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதேசமயம் காவல்துறையினரின் பார்வை சிமி மற்றும் லஸ்கர் இ தொய்பா அமைப்புகளின் மீது படர்ந்துள்ளது.

admin @ 8:56 pm
Filed under: news
Bomb blast in Bangalore

Posted on Friday 25 July 2008

பெங்களூருவில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி: 9 பேர் காயம்

பெங்களூருவில் இன்று மதியம் தொடர்ச்சியாக 5 குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண்மணி பலியானார். 9 பேர் காயமடைந்தனர்.

பரபரப்பான ராஜாராம் மோகன் ராய் சர்க்கிளில் முதல் குண்டு மதியம் 1.30 மணியளவில் வெடித்தது. அடுத்தடுத்து 15 நிமிட இடைவெளிகளில் சிர்ஜாபூர் சாலை, நயன்தல்லி, மடிவாலா செக்போஸ்ட், அத்திகுடி பகுதிகளில் குண்டுகள் வெடித்தன.

வெடித்த குண்டுகள் எல்லாம் சக்தி குறைந்தவை என்பதால் பாதிப்பு அதிகமில்லை. ராஜாராம் மோகன் ராய் சர்க்கிளில் வெடித்த குண்டு வெடிப்பில் ஒரு பெண்மணி பலியானார். இந்த குண்டுவெடிப்பால் காயமடைந்த 9 பேர் மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த குண்டு  வெடிப்பு கூறித்து பெங்களூரு நகர காவல் ஆணையர் சங்கர் பிதாரி கூறுகையில், ”சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பொதுமக்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குண்டு வெடிப்பு குறித்து நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்” என்றார்.

admin @ 4:19 am
Filed under: news