தமிழகத்தை விட்டு ரஜினி வெளியேற வேண்டும்: இந்து மக்கள் கட்சி

சென்னை: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்து தான் பேசியது தவறு. அதற்காக கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக ரஜினி கூறியதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்:
ஒகேனக்கல் பிரச்னையில் பேசிய பேச்சில் பாடம் கற்றுக்கொண்டதாக கூறும் ரஜினி, அதை எந்த அர்த்தத்தில் கூறினார் என்று தெரியவில்லை. அவர் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டதை தவறு என்கிறாரா? அல்லது குடிநீருக்காக தவிக்கும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களுக்காக பேசியதை தவறு என்கிறாரா?
எனவே, அவரை சூப்பர்ஸ்டார் ஆக்கிய தமிழக மக்களுக்கு பதில் சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். தனிப்பட்ட சுயலாபத்துக்காக தமிழக பிரச்னையை விட்டுக்கொடுத்துவிட்டாரா? என்று கேட்க விரும்புகிறேன்.
சத்யராஜ்:
ரஜினி மன்னிப்பு கேட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இப்படியா அவர் பல்டியடிக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழர்களையும் ரஜினி அவமானப்படுத்திவிட்டார். எனக்கு இந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டிருக்குமானால், கர்நாடகத்தில் அந்தப்படம் எவ்வளவு நஷ்டம் அடைந்திருக்குமோ, அந்தத் தொகையை என் சம்பளத்தில் இருந்து தந்திருப்பேன். மன்னிப்பு கேட்டிருக்கமாட்டேன். ரஜினி தமிழர்களை இளிச்சவாயர்களாக நினைத்து விட்டார் போலும்.
லட்சிய தி.மு.க. பொதுச் செயலாளர் விஜய. டிராஜேந்தர்:
தமிழர்கள் மத்தியில் ரஜினி தன்னை காட்டிக்கொள்ள நினைத்தார் ஹீரோவாக. இன்று கன்னட அமைப்புகளுக்கு பயந்து வருத்தம் தெரிவிப்பதாகப் பேசி தன்னை வெளிப்படுத்தி விட்டார் ஜீரோவாக.
அங்கே எவ்வளவு நஷ்டம் ஏற்படுமோ அதை தயாரிப்பாளருக்கு கொடுத்துவிட்டு, தமிழ்த் திரைப்படஉலகின் மூலம் போராட வேண்டியதுதானே?
ரஜினி மன்னிப்பு கேட்க வைத்த கன்னட மக்களின் மொழிப்பற்றை, ஒற்றுமையை பாராட்டுகிறேன். அந்த உணர்வு தமிழர்களுக்கு இல்லாமல் போய்விட்டதே என்று வேதனைப்படுகிறேன்.
இந்தவிஷயத்தில் கன்னடர்களிடமிருந்து ரஜினி கற்றதாக சொல்கிறார் பாடம். இவரைப் போன்ற நடிகர்களிடத்தில் தமிழக மக்கள் கற்றுக் கொள்ளவேண்டும் பாடம். அவர் யார் என்பதை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக கன்னடத்தில்தான் கடிதம் எழுதியுள்ளார். இதிலிலிருந்து அவர் யார் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களாக வாழ கற்றுக் கொள்ளவேண்டும்
இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் செந்தில்குமார் விடுத்துள்ள அறிக்கையில்,
ஒகேனக்கல் குடிநீர் பிரச்னைக்காக தமிழ்த் திரைப்படத்துறையினர் நடத்திய உண்ணாவிரதத்தில் நடிகர் ரஜினிகாந்த் மிக உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை உசுப்பேற்றி பரபரப்பு செய்தியாக்கினார்.
ஆனால் இன்றோ தனது குசேலன் திரைப்படத்துக்கு கர்நாடகத்தில் ஒரு சில கன்னட வெறியர்களால் மிரட்டல் ஏற்பட்டு அதனால் திரையிட முடியாமல் போய் விடுமோ என்ற அச்சத்தில், ‘கர்நாடக மக்கள் தனக்கு பாடம் புகட்டி விட்டார்கள். இனிமேல் அதுபோல் பேச மாட்டேன்’ என்று தார்மீக மன்னிப்பு கேட்டுள்ளார். இது ஒட்டுமொத்த தமிழக மக்களையே அவமானப்படுத்தக் கூடிய செயலாகும்.
தமிழக மக்களையும், இளைஞர்களையும் தனது ரசிகர்களாக கொண்டு கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்த ரஜினி தான் ஒரு கன்னடர் என்பதை நிரூபித்துள்ளார்.
தனது திரைப்படத்தின் மூலம் இளைஞர்களுக்கு ஒரு நல்ல கருத்தையும் அவர் சொன்னதில்லை. வியாபாரரீதியாக திரைப்படத்தில் வாங்கும் சம்பளம் ரூ.20 கோடிக்கு நஷ்டம் வந்து விடுமோ என்று அவர் அச்சப்படுகிறார்.
உண்ணாவிரதத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக, ஆவேசமாக, கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய பேச்சுக்களை திரும்பப் பெற்று ரஜினிகாந்த் வாய் சொல்லில் வீரர் என்பதை நிரூபித்துள்ளார்.
எனவே அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தான் சம்பாதிக்க வியாபார தளமாக தமிழகத்தையும் தமிழக இளைஞர்களையும் பயன்படுத்திக் கொண்ட ரஜினிகாந்துக்கு இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.