Posted on Friday 31 October 2008

‘பஞ்ச்’ பாலு
தயவுசெய்து முதலில் பின்குறிப்பைப் படித்து விடவும்.
பஞ்ச் டயலாக் விடும் பெருந்தலைகளுக்கே பஞ்ச் விடுவது தான் பஞ்ச் பாலுவின் பாலிசி!
அவரு எவ்வளவு பவரு உள்ளவரா இருந்தாலும் பஞ்ச் பாலுக்கிட்ட மாட்டினா பஞ்சு, பஞ்சா பறக்க வேண்டியதுதான்.
பின் குறிப்பு: கண்டிஷன்ஸ் அப்ளை மாதிரி இது என்னடா பின்குறிப்புன்னு பார்க்கறீங்களா. வழக்கமான மேட்டர்தான்.
பஞ்ச் பாலு அடிக்கும் கமெண்டுகள் சும்மா தமாசுக்குத்தான். யார் மனதையும் புண்படுத்தும் வகையில் எழுதப்படுவதில்லை.
சும்மா படிச்சுட்டு, ஆங்… அப்படியான்னு ரொம்ப ஈசியா எடுத்துக்கிட்டு போயிடனும். ஓ.கே?
…………………..
தேர்தல்கள் நடத்தி நாங்கள் களைத்துப் போய்விட்டோம். சட்டப்பேரவைகள் முன்கூட்டியே கலைக்கப்படுவதைத் தவிர்க்க 5 ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கட்டாயமாக்க வேண்டும்.
- தேர்தல் ஆணையர் கோபால்சாமி
அதெப்படிங்க அரசியல்வாதிகளுக்கு ஏற்றாற்போலவே நீங்களும் யோசிக்கிறீங்க? அரசியல்வாதிகள் படுத்தும் பாட்டில் இருந்து தப்பிக்க, மக்களுக்கு இருக்கிற ஒரே ஒரு இடைக்கால நிவாரணத்திலும் கைவைக்கச் சொன்னா எப்படி? அப்புறம் என்ன சொல்றீங்க…உங்களுக்கே இவ்வளவு களைப்பா இருக்குன்னா, காலங்காலமாக ஓட்டுப்போட்டு போட்டு கட்டை விரல் தேய்ந்துபோன மக்கள் எவ்வளவு களைப்பாக இருப்பார்கள் நினைச்சுப் பாருங்க. அது சரி, அரசியல்வாதிகளுக்கு சாதகமான இந்த கோரிக்கை நிச்சயம் கைகூடிவிடும் கவலைப்படாதீர்கள்.
கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று 25 ஆண்டுகளாகக் கோரப்பட்டு வருகிறது. ஆனால், தமிழக அரசியல் தலைவர்கள்கோரிக்கை வைத்ததும், உடனடியாகத் தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.
- கர்நாடக முதல்வர் எடியூரப்பா
‘50 வருட காவிரிப் பிரச்னையில், தமிழகத்துக்கு துரோகம் செய்யமாட்டோம்’ என்று ஒருமித்த குரலில் கன்னடத்தில் எப்போது கன்னடர்கள் சொல்கிறார்களோ அப்பதான் அது செம்மொழி என்று நீதித் தேவன் சொல்வது உங்கள் காதில் விழுகிறதா?
சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்துக்கு 12000 கோடி ரூபாய் செலவாகும்
- இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தகவல்
மனிதன் நினைத்த உடனே நெஞ்சில் வந்து நிற்கும் சந்திரனுக்குச் செல்ல இவ்வளவு செலவு செய்துதான் ஆகவேண்டுமா? 12000 கோடியை இந்திய மக்கள் தொகையான 110 கோடியில் கோடிஸ்வரர்களை தவிர்த்துவிட்டு, சுமார் 100 கோடி பேருக்கு பிரித்துக் கொடுத்தால்கூட தலா 120 கோடி ரூபாய் கொடுத்து அவர்களையும் கோடிஸ்வரர்களாக்கி விடலாமே! இல்லாதவன், இருப்பவன் என்ற பேதமாவது ஒழியுமே?
ஜெயலலிதாவிடம் அரசியல்ரீதியாகப் பேசுகிறேன் என்பதற்காக, கூட்டணி விஷயத்தில் அவருக்கு ஆலோசனை சொல்ல மாட்டேன். ஏனேன்றால், யாருடைய ஆலோசனையும் அறிவுரையும் அவருக்குத் தேவையில்லை.
- ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி
எப்படீங்க ஜெயலலிதா விஷயத்தில் நீங்ககூட உண்மையை சொல்றீங்க? இதுக்கு ஆதாரம் ஏதாச்சும் புளூட்டோ கிரகத்தில் இருக்கிறதா என்று கேட்க மாட்டோம். நல்ல காலம், நீங்க உண்மையைச் சொல்லலேன்னா போயஸ் கார்டன் பக்கம் நீங்க மழைக்குக் கூட ஒதுங்க முடியாம போயிருக்கும்.
நாற்பது ஆண்டுகளாக இருந்து வரும் இலங்கைப் பிரச்னைக்கு நான்கு நாட்களில் தீர்வு காண முடியாது.
- கருணாநிதி
அது ச(தி)ரி! நான்கு நாட்களில் இலங்கைப் பிரச்னையை தீர்க்குமாறு யார் கேட்டது? நாற்பது வருடங்களாக ஏன் தீர்க்கவில்லை என்று தான் அப்பாவித் தமிழ் மக்கள் உங்களை கேட்கிறார்கள்!
இலங்கைப் பிரச்னையில் முதல்வரின் நாடகம் அம்பலமாகி விட்டது. சர்வ கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ராஜிநாமா முடிவை, கருணாநிதி தானாக விலக்கிக் கொண்டது சரியல்ல.
- பா.ஜ.க., மாநிலத் தலைவர் இல. கணேசன்
முட்டைப் போட்ட கோழிக்குத்தானே வலி தெரியும். உங்களிடம் ஆட்சியும், 40 எம்.பி. க்களும் இருந்திருந்தால் உங்கள் பவுசு தெரிஞ்சிருக்கும்.
Punch Balu’s Old punches












































