Monday 23 June 2008

2008/06/24 Alasal parvai

திரைப்பட எதிர்ப்பு தேவைதானா?

dasavatharam1.png

திரையுலகப் பிரமுகர்களை இப்போதெல்லாம் அவர்களுடைய புனித ஸ்தலமான படப்பிடிப்பு தளங்களில், வியாபாரம் பேசும் அலுவலகங்களில், பொதுமேடைகளில் பார்ப்பதைவிட நீதிமன்றப் படிக்கட்டுகளில் (அடிக்கடி) பார்க்கலாம்.

ஒன்று, அவர்களாக வருகிறார்கள்.  தங்கள் சுயவாழ்க்கைப் பிரச்னைகளுக்கு தீர்வுக் கேட்டு.
இரண்டு, வரவழைக்கப்படுகிறார்கள்.  அவர்கள் நடித்த, தயாரித்த, இயக்கிய, திரைப்படங்களை எதிர்ப்பவர்களால்.

அவர்களின் சுயவாழ்க்கைப் பிரச்னைகளைப் பற்றி நாம் ஆராயவேண்டாம்.

திரைப்படங்களுக்கு எதிரான எதிர்ப்புதான் இப்போது பேசவைக்கும் பிரச்னையே.

திரைப்படம் ஒன்றிற்கு தடை கேட்டு வழக்கு தொடுப்பது என்பது முக்குக்கடையில் வடை சாப்பிடுவது போல் எளிதாகிவிட்டது, இப்போது. வடையைச் சாப்பிட்டால் பரவாயில்லை. பொன்னான நீதிமன்ற நேரத்தையும் இவர்கள் சேர்த்தே சாப்பிடுகிறார்களே?

சமீபத்தில் தசாவதாரம் திரைப்படத்திற்கு எதிராக வழக்குகள் எடுத்த அவதாரங்கள்தான் எத்தனை? கடைசியில் என்னவாயிற்று.  முதல்ல படம் வெளிவரட்டும். அப்புறம் பார்க்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியதும் வாலை சுருட்டிக் கொண்டார்கள். மூன்று மாதங்கள் (வெத்துக்கு) போராடியது வீண்தானே.

கமல், தசாவதாரம் திரைப்படத்தை எடுத்து முடித்து வெளியிடுவதற்குள் பதினோராவது அவதாரம் எடுக்கவேண்டியிருந்தது.

இந்த எதிர்ப்பினால் ஏற்பட்ட தயாரிப்பாளர், நடிகர், இயக்குநரி்ன் மன உளைச்சல்களுக்கு யார் நிவாரணம் தருவது? இலக்கற்று எய்யப்படும் அம்புகளால் யாருக்கு என்ன லாபம்? யார் தலைமீதாவது அவை விழுந்தால் அதற்கு யார் பொறுப்பு?

திரைப்படங்களுக்கு எதிராக ஏதோ ஒரு காரணம்பொருட்டு எதிர்ப்புகள் தோன்றுவதும், பதிவு செய்யப்படுவதும் காலகாலமாக இருக்கிறது. சமீபத்தில் அது அதிகமாகிவிட்டது. ஆனால், அவை எப்போதுமே வீரியம் அற்றவை.

ஒரு திரைப்படம் பல நிலைகளில் எதிர்ப்புகளை சந்தித்தாலும் மூன்று திக்குகளில் இருந்துதான் அதிக எதிர்ப்புகளைச் சந்திக்கிறது.

ஆரம்பத்திலேயே சிலது அல்லல்படும். தலைப்புக்கே தள்ளாடும்.

தாங்க முடியாத எதிர்ப்பு வந்தால் தலைப்பு மட்டுமல்ல சில தலைள்கூட மாறும். கமலின் சண்டியர் விருமாண்டியாக மாறிய கதை தெரியும்தானே.

இன்னும் சிலர் ஏடாகூடமான தலைப்பை வைத்துவிட்டு சண்டித்தனம் செய்வார்கள். இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூர்யா அதில் ஒருவர். இரண்டு எழுத்தில் தலைப்பு வைப்பதுதான் இவர் லட்சியமே. நியூ என்ற தலைப்பில் ஒரு புதியக் கதையை முழு நீ(ல)ளமாக கொடுத்தார் பாருங்கள். அடுத்தமுறை பி.எப். என்று தலைப்பு வைத்துவிட்டு  பெஸ்ட் பிரண்டு  என்று ஏதேதோ சமாளித்துப் பார்த்தார். பிறாண்டல் தாங்காமல் லட்ச ரூபாய் பரிசளித்து அ, ஆ  என்று அருமையான தலைப்பை பிடித்தார். பெஸ்ட் பிரண்டு எப்படி அன்பே, ஆருயிரே என்று கொஞ்சும் உறவாக மாறும் என்பது அவருக்கே வெளிச்சம்.

இதை யாரும் எதிர்த்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. படத்தில் அன்பும் இல்லை, ஆருயிரும் இல்லை என்பதால் மக்கள் ஒதுக்கித் தள்ளினார்கள்.

தலைப்பு மட்டுமல்ல, திரைப்படம் ஒன்றின் கதை, வசனம், பாடல் வரிகள், காட்சிகள், நடிப்பு என எது வேண்டுமானலும் எதிர்ப்புக்கு உள்ளாகலாம். படபூஜை தொடங்கி படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கையில் கூட எதிர்ப்புகள் தோன்றலாம்.

ரஜினியின் நான் காந்தி அல்ல திரைப்படம் நான் மகான் அல்ல என்று பெயர் மாறியது.

பா.ம.க. கட்சியினரால் ரஜினியின் பாபா  பட்டபாடு இருக்கிறதே, அது பெரும்பாடு. படப்பெட்டிக்குள் படுத்துக் கொண்டன பாபா திரைப்படச்சுருள்கள். அரசியல் எதிர்ப்பால் பாட்ஷா ஓடியது என்றால் அதே எதிர்ப்பால் பாபா திரையரங்கை விட்டே ஓடியது. இந்த, இதனால் ஓடியது என்பதில் உண்மை இல்லை. இரண்டையும் இயக்கியது சுரேஷ்கிருஷ்ணா தான். பாட்ஷாவில் உண்மையில் விஷயம் இருந்தது. பாபாவில் அது இல்லை.

பாபாவில் வாலியின் வரிகளில் வந்த பாடலும் திராவிடர் கழகத்தின் எதிர்ப்பை சம்பாதித்தது. அந்தப் பாடல் வரிகள் பெரியார் மற்றும் கடவுள் மறுப்பாளர்களை கொச்சைப்படுத்துவதாக   கீ.  வீரமணி வழக்கு தொடர்ந்தார்.

கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் தலைப்பிற்காக கடும் எதிர்ப்பை சந்தித்தது. ஆனாலும் அதை கமல் மாற்றவில்லை. அதே தலைப்பில்தான் வெளியிட்டார். படம் சுமார்தான்.

ரஜினியின் மருமகனான தனுஷ் நடித்த, பொல்லாதவன் திரைப்படம்கூட வசனத்திற்காக எதிர்ப்பைச் சந்தித்தது. இந்தத் திரைப்படத்தில் தனுஷ் தன்னுடைய அப்பாவிடம்,  என் பிரண்டோட அப்பாவைப்பாரு, தன்னோட பையனுக்காக 25 இலட்சம் கொடுத்து மெடிக்கல் காலேஜ்ல சீட் வாங்கியிருக்கார். நீ என்னடான்னா தியாகராஜா காலேஜ்ல பி.ஏ. சீட் வாங்கிக் கொடுத்திருக்கே என்பார்.

இந்த வசனத்தை எதிர்த்து சென்னையில் உள்ள தியாகராஜா கல்லூரி நிறுவனம் வழக்குதொடுத்தது. கல்லூரி பெயரை கெடுத்ததாகக் கூறி 50 இலட்சம் நஷ்டஈடு கேட்டது. அதன்பிறகு அந்த வசனம் நீக்கப்பட்டது.

சமீபத்தில் வெளிவந்த விஜய்யின் குருவி திரைப்படத்தில் வரும் சும்மா மொழுமொழுன்னு தில்லையாடி வள்ளியம்மா பாடலை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்தார். அந்த வரிகள் தூக்கப்பட்டன.

எதிர்ப்பை சந்திக்கும் திரைப்படங்கள் வெற்றியும் பெற்றிருக்கின்றன. தோல்வியையும் சந்தித்திருக்கின்றன. ஆனால், அந்த வெற்றியும் தோல்வியும் எதிர்த்ததால் மட்டுமே வந்ததல்ல.

நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, அரசு கொள்கைகள் போன்றவற்றை கேள்விக்குறியாக்கும் திரைப்படங்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் முடிவுகள் வேறு விதம். மதரீதியாக பிரச்னை ஏதும் வந்துவிடக் கூடாது என்று அரசுகள் நடவடிக்கைகள் எடுப்பது உண்டு.

பொதுவாகவே அரசியல்வாதிகளும், திரையுலகினரும் ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். கொஞ்சம் பகைத்துக் கொண்டால் இருவருமே பரஸ்பரம் வெடி போட்டுக்கொள்வார்கள். திரைப்படத்தில், அரசியல்வாதிகளுக்கு எதிராக பஞ்ச் வசனம் பேசி பேரை பணால் ஆக்கிவிடுவார்கள்.

ஆனால், அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் கட்சிக்காரர்களுக்கு அதிகாரம் அதிகம். அரசு என்கிற ஆயுதம் கையில் இருப்பதால் அவர்கள் நினைத்தால் அந்தத் திரைப்படமே வராமல் செய்துவிடுவார்கள். அரசு போட்ட தடையால் வெளிவராத திரைப்படங்கள் எத்தனையோ உள்ளன.

ஆனால் அரசே ஆணையிட்டும் நீதிமன்ற தலையீட்டால் வெளிவந்த திரைப்படங்களும் உண்டு. சமீபத்தில், டாவின்ஸி கோட் என்கிற திரைப்படத்திற்கு தடை கேட்டு முதல்வரை சந்தித்தனர் சிறுபான்மையினர். தமிழக அரசும் உடனே வன்முறை, கலவரம் ஏற்படும் என்று சொதப்பல் காரணங்களை அடுக்கி தடைப்போட்டது.

நீதிமன்றம் கேட்டது , வன்முறை, கலவரம் ஏற்படாமல் தடுக்கத்தானே அரசு என்று ஒன்று இருக்கிறது  என்று. அந்தத் திரைப்படம் வெளிவர உதவி செய்தது.

பிறகு அது தேறாமல் போனது வேறு விஷயம்.

அரசியல், மதம், பொதுநலம் (தனிப்பட்ட நலனை விட்டுவிடலாம்) என்று எதிர்ப்புகள் தோன்றினாலும் இப்போதெல்லாம்  பொதுநலம்   என்கிற எதிர்ப்புதான் திரையுலகினருக்கு நிறைய பூச்சாண்டி காட்டுகிறது.

இந்த பொதுநலம் கருதி போடப்படும் வழக்குகள்தான் பல நேரம் படுத்தும். தன் மொழி, இனம், கலாசாரம், சமூக கட்டுப்பாடு, குலக்கொள்கைகள் பாதிக்கிறது என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு வருபவை இவை.

நீதிமன்றங்கள்தான் இவர்கள் இளைப்பாறும் இடம்.

பொதுநலம் கருதிப் போடப்பட்ட எத்தனையோ வழக்குகளில் பல வெற்றிபெற்று சமூகத்திற்கு நன்மை செய்திருக்கின்றன.

ஆனால், திரைப்படங்களுக்கு எதிரான பொதுநல வழக்குகள் பல தோல்வியையே தழுவியுள்ளன. பொதுநலம் குறித்து பொருந்தாமல் பேசுபவர்களுக்கு தள்ளுபடி என்ற பரிசுதான் கிடைத்திருக்கிறது.

தடைகோரி வழக்கு தொடுப்பவர் ஒன்றை யோசிப்பதில்லை. சமூகத்திற்குத் தெரியாமல் எதுவும் நடப்பதில்லை என்பதுதான் அது. எது ஒன்றில் இருந்தும் தனக்கானதை மட்டுமே ஈர்த்துக்கொள்ளும் சக்தி அதற்கு உண்டு.

திரைப்படங்கள் மூலம் அரசியல்ரீதியாக, மதரீதியாக மக்களிடையே மாற்றங்களை கொண்டுவரலாம் என்பது 60, 70களில் முடிந்துவிட்ட ஒன்று. அப்போது தாங்கள் சாதித்ததின் பலனைத்தான் இன்னும்கூட சிலர் தொடர்ந்து அனுபவித்து வருகிறார்கள்.

மதக்கூறுகளை திரைப்படங்கள் மூலம் திணிக்கமுடியும் என்பதும் இப்போதைக்கு மாயைதான்.

மக்களிடையே பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் சக்தி இன்றைய சினிமாவுக்கு இல்லை என்றே தோன்றுகிறது. நடிகர்கள், நடிகைகள் வேண்டுமானால் தனக்கான ரசிகர்களை மக்களிடம் இருந்து பொருக்கி எடுக்கமுடியும். மற்றபடி அவர்களுக்குள் கருத்தெதையும் பொருத்திவிடமுடியாது.

அதனால் பொதுநலம் கருதுவோர் கவலைப்படவேண்டாம்.

கோடிகளை கொட்டி திரைப்படங்கள் எடுப்போர், நடிப்போர் அதை பல கோடியாக்கத்தான் ஆசைப்படுவார்களே ஒழிய மூலையில் போய் முடங்கிக் கிடக்க ஆசைப்படமாட்டார்கள்.

அவர்கள் வியாபாரரீதியாக, பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள். மக்களும் அது பொழுதுபோக்கு என்று உணர்ந்தே திரையரங்கங்களுக்கு படை எடுக்கிறார்கள்.

ஒரு சிலர் இருக்கலாம், உன்மத்தமான கதைகளைத் தர. அதையும் அவர்கள் வணிகரீதியாகத்தான் பின்னியாகவேண்டும். இன்றைக்கு லட்சங்கள் இன்றி லட்சியங்கள் இல்லை. அவ்வகைத் திரைப்படங்களை காணும் மக்கள்,  ஆஹா இது நல்லாயிருக்கே  என்று ஜஸ்ட் லைக் தட் பாராட்டிவிட்டுப் போகும் நிலைதான் உள்ளது.

திரைப்படங்களை எதிர்ப்பதால் எதிர்ப்பவருக்கும் பலனில்லை. மக்களுக்கும் பலனில்லை.

ஷகிலா போஸ்டருக்கே அன்றைக்கு போரிட்ட மக்கள், ஷகிலா திரைப்படங்களை விட மோசமானவற்றை தங்கள் வீட்டு வரவேற்பறைக்குள் நுழைய விட்டுவிட்ட காலமிது.

வழக்குகள் எல்லாம் பொதுமக்கள் வம்பளக்கத்தான் உதவும்.

மக்கள் கண்ணோட்டமே வேறு.

அவர்களுக்கு ஏற்புடையதாக, பிடித்திருந்தால் மட்டுமே திரையரங்கக் கூரைகளை பிய்த்துக்கொண்டு காசுமழைக் கொட்டும். கல்லா புல்லாகும். இல்லாவிட்டால், அதே திரைப்படம் திரையரங்கைவிட்டே பிய்த்துக்கொண்டு வெளியே ஒடும்.

யார் எதிர்த்தாலும், ஆதரித்தாலும் கதைச்சத்து இருந்தால்தான் மக்கள் அதை ஓட்டுகிறார்கள். அது இல்லாதபட்சத்தில், அதை ஓட ஓட விரட்டுகிறார்கள்.

அதனால் வெள்ளித்திரையை பளப்பாக்கும் வேலையை திரைத்துறையினரிடமே விட்டுவிடலாம். அவர்கள் செய்வது சரிதானா என்று சோதிக்கும் பொறுப்பு எப்போதும்போல் மக்களிடமே இருக்கட்டும்.

தடை கேட்டு தவிப்பதில் அர்த்தம் இல்லை என்பதே நிதர்சன உண்மை.

- கிருஷ்ணாசேகர்

இந்த அலசல் குறித்து உங்கள் கருத்து என்ன? உடனே அனுப்புங்கள்.

Related Post

2 Responses to “2008/06/24 Alasal parvai”

  1. Suresh Krishna

    Good one. Can not agree more..

  2. katheem

    யார் எதிர்த்தாலும், ஆதரித்தாலும் கதைச்சத்து இருந்தால்தான் மக்கள் அதை ஓட்டுகிறார்கள். அது இல்லாதபட்சத்தில், அதை ஓட ஓட விரட்டுகிறார்கள்.// this is the fact and only fact

Leave a Reply