Thursday 19 June 2008
வலியின்றி வசந்தம் வருமா?
செளகரியங்களை, சுகங்களை அனுபவிக்கிறவர்களைப் பார்த்து வயிறு எரிகிறவர்கள் உண்டு. ஏக்கப்படுகிறவர்கள் உண்டு. ஆனால், இவற்றிற்குப் பின்னால் உள்ள வலிகள்; முயற்சிகள்; போராட்டங்களை எண்ணிப் பார்ப்பவர்கள் எத்துணைப் பேர்?
இப்படிப் பொறாமைப்படுகிறவர்கள், இருக்கிற தங்களின் கொஞ்ச நஞ்ச மகிழ்வையும் கெடுத்துக் கொள்வதோடு உடல்நலத்தையும் கூட மோசமாக்கிக் கொள்கிறார்கள். ஏக்கப்படுகிறவர்களையாவது கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம். காரணம், இந்த ஏக்கம் நாமும் இவற்றை அடைய வேண்டும் என்கிற எண்ணத்தை ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது.
ஆனால் எடுத்த எடுப்பிலேயே செளகரியத்தை, சுகத்தை அனுபவிக்கிறவர்களை ஊக்க சக்திகளாக எடுத்துக் கொள்கிறவர்கள்தாம் பாராட்டுக்குரியவர்கள். இந்த உணர்வை அழுத்தமாகப் பதித்தால், திரும்பத் திரும்ப எண்ணினால், யாரைப் பார்த்து வியந்தார்களோ அவர்களைவிட உயர்ந்துவிட வாய்ப்பு உண்டு.
தந்தையை மிஞ்சிய தனயன்கள்; குருவை மிஞ்சும் சிஷ்யர்கள் என்று கேள்விப்படுகிறோமே, பார்க்கிறோமே, இவர்களின் உருவாக்கங்கள் வேறு எப்படி நடந்தன என்கிறீர்கள்? ‘என்கிட்டதான் வேலை பார்த்தான்; இப்பத் தனியா தொழில் செஞ்சு என்னைவிட வளர்ந்துட்டான்’ என்று எத்துணையோ முதலாளிகள் சொல்ல நேரிடுகிறதே, இந்த அதிசயம் நிகழ்ந்தது இப்படித்தான்.
ஆனால் வெறுமனே வியந்தால் போதுமா? உயிரைக் கொடுப்பதற்கிணையான முயற்சி வேண்டாமா?
அழகான இயற்கைக் காட்சிகளைப் பார்க்க வேண்டுமா? முழங்கால் கெஞ்சும்படியாக உயரம் ஏறத்தான் வேண்டும். கோப்பைகள் தேவையா? மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடத்தான் வேண்டும்.
எந்த ஒன்றும் விலை கொடுக்காமல் இலவசமாகக் கிடைப்பதில்லை.
உலகம் எனும் பல்பொருள் அங்காடியில் எதுவும் சுலபமாகக் கிடைத்துவிடாது. உழைப்பு, முயற்சி எனும் நோட்டும் சில்லறையும் தேவை.
இன்னுமொன்றும் உறுதி.
வலியில்லாமல் பெறுகிற வசந்தம் நிலைப்பதே இல்லை!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/06/13 பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?










































June 20th, 2008 at 10:20 pm
Excellent !!