Thursday 12 June 2008
பல்லைக் கடித்தபடி பல்லிளிக்க வேண்டியதன் அவசியம்!
நட்பு வேண்டும்; உறவு வேண்டும்; தயவு வேண்டும்; தாட்சண்யம் வேண்டும் என்றால் இந்த நான்கிற்கும் ஒன்றை மட்டும் பதிலுக்குத் தந்தால் போதும்.
அது, மனிதநேயம்.
மிக வேண்டியவர்களே நமக்குப் பிடிக்காதபடி நடந்து கொள்கிறார்கள். விரும்பத்தகாத விஷயங்களைச் செய்கிறார்கள். முடியவே முடியாது என்கிற இரகத்தில் அடக்குகிற உதவிகளைக் கேட்கிறார்கள். எரிச்சலாக வருகிறது; கோபத்தைக் கட்டுப்படுத்த நினைத்தாலும் முடிவது இல்லை.
உடனே எதையோ சொல்லி வைக்கிறோம்; சில சமயங்களில் தீப்பிழம்புகளைக் கக்குகிறோம். அவ்வளவுதான். எத்தனையோ ஆண்டுக் காலமாக வளர்த்த உறவு ஒரே நாளில் தலை சீவப்படுகிறது.
ஒருவரின் பின்னே நாய்க் குட்டியைப் போல் தொடர்ந்து ஓடவேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கேட்டவற்றையெல்லாம் செய்து தரவேண்டிய தேவையும் இல்லை. ஆனால் முடிந்தவரை பொறுத்துப் போகலாமா? முடிந்தவரை அனுசரித்துப் போகலாமா? முடிந்தவரை இவர்களுக்கு உதவலாமா? என்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் சமயங்களில் படுத்துவார்கள். உறவினர் ஒருவர் ஏ.சி.யைப் போட்டுவிட்டு பகல் முழுக்க வெளியில் சுற்றப் போய்விடுகிறார். வீட்டுக்காரருக்குக் கோபம் வந்தால் அது நியாயம்தான். ஆனால் இதை வெளிப்படுத்தும் விதம்தான் முக்கியமானது. ”பரவாயில்லை. தினமுமா இப்படிச் செய்யப் போறீங்க?” என்று இதமாக இடிக்கலாம். இதுகூட அவசியமில்லை. மறுநாள் இவர் புறப்படும் போது ஏ.சி. நிறுத்தப்பட்டுள்ளதா என்று எட்டிப் பார்த்துக் கொண்டால் அதுதான் நாகரிகம்.
கடன் வசூல் செய்பவர்களுக்குப் பொறுமை தேவை. வார்த்தைகளை விட்டுவிட்டால் அவற்றையே நமக்கெதிராகப் பயன்படுத்துவார்கள். கடனாளிகள், முன்பணம் கேட்பவர்கள், விடுமுறை கேட்பவர்களிடம் பல்லைக் கடித்தபடி பல்லிளித்து மறுக்கலாம். மறுக்கவும் மறுத்து பல்லைக் கடித்தால் அந்த ஊழியர் நாள்படத் தங்கமாட்டார்.
நண்பர்கள், உறவினர் கேட்கிற உதவி சற்றும் நியாயமில்லை என்றாலும் அதையும் இதமாக மறுப்பது அவசியம். மொத்தத்தில், எந்த ஒரு விஷயத்திலும் நாம் எப்படிப் பிரதிபலிக்கிறோம் என்பது மிக முக்கியம்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/06/06 ஆமாம் சாமிகள் எனும் ஆபத்தான ஆசாமிகள்!
2008/05/30 இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?









































