Thursday 29 May 2008
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?
நாட்டுப்பற்று; வீரம்; அஞ்சாநெஞ்சம், மன உறுதி; கட்டுப்பாடு; ஒழுக்கம்; இலக்கை நிர்ணயித்து வென்று முடிப்பதில் தீவிரம் ஆகியவை இராணுவ மனநிலையின் சில அம்சங்கள்.
இவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். கடமையாற்றப் புறப்படும்போது மனைவி ”போகாதே! போகாதே! என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்” என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படப் பாடலைப் பாடாத குறையாய்க் கணவனைத் தடுக்கிறாள்.
”அடி என் பிரிய சகியே! உன் விருப்பத்திற்கு மாறாக எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது” என்று வீடு தங்கிவிடுவது ஆண்மையாகாது. இங்கே வேண்டியது இராணுவ மனநிலை. உன் அன்பு முக்கியம். ஆனால் இதைவிடக் கடமையே எனக்குப் பெரிது. உன் களம் இல்லம் என் களம் அதுவல்லவே! இதனினும் பன் மடங்கு விரிந்து பரந்தது என் உலகம். அதில் இறங்கி எனக்கு இடப்பட்ட சவால்களை நான் வென்றாக வேண்டும். அதுதான் உனக்குப் பெருமை சேர்க்கும். இல்லாவிட்டால் உன் முந்தானை முடிச்சு அவதூறாகப் பேசப்படும் என்று புறப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
ஒரே மகள். வெளியூரில் வேலை; அல்லது வெளி நாட்டில் படிப்பு. எப்படிப் பிரிவேன் கண்ணே உன்னை? என்கிற உருகல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உன் விருப்பத்திற்கு எதிராக எனக்கு ஒரு சிந்தனையும் இல்லை. உன் வளர்ச்சிக்கு நானா தடையாக இருப்பது; உன் தாகத்திற்கான தண்ணீரை நானல்லவா தர வேண்டும் என்கிற சிந்தனைகளால் நெஞ்சை நிரப்பி, அதைக் கல்லாக்கிக் கொண்டு இராணுவ மன நிலையுடன் அவளை வழியனுப்பி வைக்க வேண்டும். இதைவிட ஒருபடி மேலே போக வேண்டிய அவசியமும் ஏற்படலாம். நான் போகலைப்பா, உங்களை விட்டுவிட்டு எப்படிப்பா இருப்பேன் என்கிற பெண்ணையும் இராணுவ மனநிலையுடன் கையாண்டு அனுப்பியாக வேண்டும். ஆக இங்கு இவளது விருப்பத்திற்கு எதிராக இயங்கவும் இராணுவ மனநிலை தேவை.
சோதனைகள் தொடரும் போதும் இராணுவ மனநிலை தேவை. எது வந்தாலும் எதிர்கொள்வேன். சூழ்நிலை எனும் எதிரியின் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்கிற மனநிலைதான் நமக்கமைந்த பெருந்துணையாகும். குளிரில் குளிக்கத் தயங்குவது; சீக்கிரம் எழுந்து தூக்கத்தை தியாகம் செய்ய முன்வருவது; எந்த நிலையிலும் எதற்கும் தயாராக இருப்பது; கடமையின் முன் அனைத்தும் துச்சம் என எண்ணுவது ஆகியவையும் இராணுவ மனநிலையின் துணையம்சங்களே!
இராணுவ வீரர்கள் போர்க்களத்தில் போரிடுவதைக் காண எனக்குக் கொடுத்துவைக்கவில்லை. ஆனால் இவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை அருமையாகச் சமாளிப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
ஐயோ! இந்த மனநிலை நம்மவர்களுக்கும் வராதா என்று ஏங்கியிருக்கிறேன்.
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/05/23 கனிவாய்ப் பேசிக் காரியமாற்றுவோம்!
2008/05/16 வேர்களில் வெந்நீர் ஊற்றுவதா?
2008/05/09 ஆபத்துகளுள் பேராபத்து எது?
2008/05/02 கவனிப்பில் உன்னிப்பு!
2008/04/25 ஒப்படைத்தல் எனும் ஒழுக்கம்!
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?










































June 5th, 2008 at 9:47 pm
Really this ‘ORU PAKKA KATTURAI” very useful. Peoples should atlease try to follow this.
Thanks