Friday 9 May 2008

2008/05/09 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில் - லேனா தமிழ்வாணன்

எஸ்.மகாலிங்கம, திருப்பத்தூர்.

மூன்றாவது அணியைப் பத்திரிகையாளர்களாவது சேர்ந்து அவர்கள் முயற்சியால் உருவாக்கலாமே?

பழைய பேப்பர் கடைக்குப் போய்விட்ட சங்கதி இனி மரக்கூழ்தான்! இனி அந்தக் கூழ் புதுச் செய்திகளுக்குத்தான் உதவும்! நாங்கள் உதயசூரியன் சின்னம் மாதிரி இதில் கைவிரித்துக் காட்ட வேண்டியதுதான்!


மு.பிரகாஷ், திண்டுக்கல்.

நினைத்ததற்கெல்லாம் நீதிமன்றம் போகிறவர்களைப் பற்றி?

அவர்களை நினைத்துப் பரிதாபப்பட வேண்டும். ஒரு பூனையை மீட்க ஒரு மாட்டை இழக்கப் போகிறவர்கள் மீது பரிதாபப்படாமல் என்ன செய்வது?


எஸ்.தனலட்சுமி, காரைக்குடி.

வாழ்க்கை பிடிக்கிறதா?

வாழ்விடம் தொழிலிடமாகிவிட்டதால் வேறுவழியின்றிப் பிடிக்கிறது. சென்னையில் எங்கு போனாலும் மூக்கையும் முகத்தையும் மூடிக் கொண்டு தீவிரவாதிகள் போலப் போக வேண்டியிருக்கிறது. இப்படி மூக்கைப் பிடித்துக் கொள்ளாமல் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு நிலைமை மாறினால் மிகப் பிடிக்கலாம்.


கே.பகவதி, தாம்பரம்.

பெண்கள் மவுனமாக இருந்தால் என்ன அர்த்தம்?

நம்மைச் செயலிழக்கச் செய்து அவர்கள் செயலில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். இந்த மவுனம்தான் அவர்களுக்குப் பல கோப்பைகளைப் பெற்றுத் தருகிறது.


கே.லட்சுமணன், பெருங்குடி.

அடுத்த சட்டசபைத் தேர்தலில் நாங்கள் தோற்றுவிட்டால் அரசியலை விட்டுவிட்டு வியாபாரம் செய்து பிழைத்துக் கொள்வோம் என்கிறாரே தெலுங்குதேசம் சந்திரபாபு நாயுடு?

ஆந்திர மக்கள் கொடுத்து வைத்தவர்கள். நம்மூர் அரசியல்வாதிகளுக்கு வேறு வியாபாரமும் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வியாபாரம் அரசியல்தான்.


டி.தனசேகர், சென்னை.

‘இன்டர்வியூ’ என்று வந்தாலே உடனே அரசியல்வாதிகளிடம் ஓடும் இன்றைய இளைஞர்களைப் பற்றி?

தங்கள் திறமையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. சமையல் அறையைத் தேடி ஓடும் இந்த கோழிக் குஞ்சுகளை யார் தடுப்பது?


எம்.ராஜேஷ், மும்பை.

திடீர்த் திருப்பங்கள் வந்தால் என்ன செய்வீர்கள்?

ஒரு ஆட்டோ டிரைவர் அளவிற்கு இன்னும் நான் படிக்கவில்லை. இனிமேல்தான் ஒரு பயிற்சியாளரை வைத்துக் கொள்ள வேண்டும்.


எல்.கண்ணன், தாம்பரம்.

அரசயில்வாதிகள் ஏன் அடிக்கடி கட்சி மாறுகிறார்கள்?

ஒரு நிரந்தர அவமானத்தைத் தற்காலிகமாகத் தள்ளிப் போடலாமே என்றுதான்!


ஆர்.ராஜாராமன், விருத்தாசலம்.

சென்னை அண்ணா சாலை இங்குள்ள அரசியல்வாதிகளால் அடிக்கடி ஆக்கிரமிக்கப்படுவது பற்றி?

அண்ணா வழியில்தான் இருக்கிறோம் என்று உலகிற்குச் சொல்ல எண்ணுகிறார்களோ?


எஸ்.சம்மந்தன், சென்னை-104.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், மாநிலங்களவையால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதமராக உள்ள நமது மன்மோகன்சிங் பற்றி?

சட்டம் என்று பார்த்தால் இவரது பட்டம் செல்லுபடியாகும். இருந்தாலும் ஒரு ரெகுலர் ஐ.ஏ.எஸ்ஸுக்கும், கன்பர்ட் ஐ.ஏ.எஸ்.ஸுக்கும் எப்போதும் ஒரு இடைவெளி உண்டு. அந்த இடைவெளி இவர் விஷயத்திலும் உண்டு.


என்.பூபாலன், திருவொற்றியூர்.

ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள்தாம் இப்போதைய சில குளறுபடிகளுக்குக் காரணம் என்கிறார்களே?

அப்படியானால் ஜெயலலிதா ஆட்சியின் குளறுபடிகளுக்கு அதற்கு முன் இருந்த தி.மு.க. ஆட்சியின் குளறுபடிகள்தான் காரணமாக இருக்குமா? நல்ல சாக்கு சொல்றாங்க போங்க.


பி.சுரேஷ், மூலக்கடை

தள்ளுவண்டியிலிருந்து ஓசியில் பழங்களை எடுத்துச் செல்லும் நமது காவலர்களைப் பற்றி?

காவலர்களிடம் நாம் காசு கொடுக்கலாமே ஒழிய, காசு கேட்கலாகாது போலிருக்கிறது. எனக்குத் தெரிந்த எழுதப்படாத இந்திய பீனல்கோடு இதுதான்.


டி.செல்வகுமார், வேளச்சேரி.

இன்றையத் தமிழக அரசியலில் தலையாய அம்சம் எது?

தலைவலி வந்தால் தைலம். தலைவலி அதற்குக் காரணம் தைலாபுரம். இப்படி ஆகிவிட்டது இன்றைய அரசியல்!


என்.ராகவன், திருநெல்வேலி.

மழைநீர் சேகரிப்பால் சென்னையில் நிலத்தடி நீர் மூன்று அடி உயர்ந்திருக்கிறதாமே?

அட, ஜெயலலிதாவின் புகழ் மூன்று அடி உயர்ந்திருக்கிறதே!


ஏ.கிருஷ்ணன், விருகம்பாக்கம்.

இன்றும் குறுநில மன்னர்கள் இருந்தால்?

இருக்கிறார்களே! இவர்கள் ‘மேலதிகாரிகள்’ என்ற பெயரில் இருக்கிறார்கள். இவர்களிடம் தான் கீழதிகாரிகள் மாதம் தோறும் கப்பம் கட்டுகிறார்களாமே!


சி.மூர்த்தி, சென்னை.

முக்கிய தினங்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆற்றும் உரைகளில் புதிதாக அப்படி என்ன இருக்கிறது?

சில வார்த்தைகள் கூடவா மாறவில்லை? ஜெராக்ஸ் எடுத்துப் படிக்கிறார்களோ?


ஜி.மணி, குடியாத்தம்.

சென்னையில் குளுகுளு வசதிப் பேருந்துகள் எப்படி?

பயணக் கட்டணம் தகிக்கிறது. குளுகுளு பேருந்துகள் பெரிய ஷேர் ஆட்டோக்களுக்குச் சமம்!


வி.வாசுதேவன், வேலூர்.

இன்றைய விலைவாசியை எப்படிச் சமாளிக்கிறீர்கள்?

மாற்றுத் தேடித்தான். பீன்ஸ் 16 ரூபாய் விற்றால் என்ன? பட்டாணி 6 ரூபாய்க்கு கிடைக்கிறதே!


எஸ்.சரசு, வேலூர்.

மல்லிகா ஷெராவத்தின் குட்டைப்பாவாடை விமரிசிக்கப்படுகிறதே?

முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்ற வகையில் மல்லிகாவிற்குக் கமல் அறிவுறுத்தியிருக்க வேண்டும். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதைப் பற்றி முதல்வர் கூட இனிக் கடுமையாகப் பரிசீலிக்க வேண்டும்.


எஸ்.வெங்கட்ராமன், கொடுங்கையூர்.

பெண்கள் அதிகம் பேசுவது எப்போது?

திருமணமான புதிதில் கணவன் அதிகம் பேசுகிறார். பேசு கண்ணு பேசு கண்ணு என்கிறான் மனைவியை. ஒன்றிரண்டு வார்த்தைகளே வருகின்றன. காலம் ஓடுகிறது. கணவன் ஒன்றிரண்டு வார்த்தைகளே பேச, மனைவி வாய்மூடாமல் பேச ஆரம்பித்துவிடுகிறார்.


ஏ.பிரபாகரன், அரக்கோணம்.

கபில்தேவ் நடத்திய கிரிக்கெட் போட்டிகளுக்கும், இந்தியன் பிரிமியர் லீகுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?

யானை, பூனை! கபில்தேவ் இனி ஏறக்கட்ட வேண்டியதுதான்.


கே.கீதாராணி, சேலம்.

தடுப்பூசிகளில் குழந்தைகள் இறப்பது உண்மையா?

தடுப்பூசியால் இறப்பது இல்லை. இதன் கவனக் குறைவான கையாளல்களால் இருக்கலாம். சில குழந்தைகளின் தற்செயலான மரணங்களும் இதனுடன் முடிச்சிடப்படுகின்றன. ஆனால் தடுப்பூசி பற்றி எழுந்துள்ள அச்ச உணர்வு உடனே போக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஊனமுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் பெருகும் அபாயம் அதிகம்.


ஆர்.ரெங்கராஜன், பட்டுக்கோட்டை.

அண்மையில் மனம் பூரித்த கணங்கள்?

பத்துச் செயற்கைக் கோள்களை இந்தியா விண்வெளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியதைச் சொல்லலாம். சூட்டோடு சூடாக சந்திரனுக்கு மனிதன் சென்று பேசவும் இது தெம்பைத் தந்துவிட்டது. இந்தியா பேசும்; சாதிக்காது என்பவர்களுக்குச் சரியான மூக்குடைப்பு!


டி.இருதயராஜ், தேவகோட்டை.

இந்தியாவில்தான் சம்பள உயர்வு அதிகமாமே?

பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்களில் மட்டும்தான் இந்நிலை. இது பெரிய பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்கி, சமூகப் பிரச்னைகளை அதிகமாக்கும் என்கிற அச்சமும் சேர்ந்து கொள்கிறது. சென்னையில் வீட்டு வாடகை உயரவும், பள்ளிகளில் நன்கொடைகள் பெருகவும் பெரும் சம்பளக்காரர்கள் காரணமாகிவிட்டார்கள். நடுத்தரக் குடும்பத்தினர் எங்கே போவார்கள்?


ஆர்.மாணிக்கம், கரூர்.

சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க வெள்ளை அறிக்கை கேட்கும் ராமதாஸின் கோரிக்கை சரிதானா?

தவறில்லை. விளை நிலங்கள் கான்கிரீட் தளங்களாகும் போது அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்கிற கேள்வி நியாயமானது. ஆனால் வெள்ளை அறிக்கையில் வேலை வாய்ப்பைப் பற்றி கவனம் செலுத்துகிறார் மருத்துவர். கணினி உலகில் ஆள் குறைவு உற்பத்தி அதிகம். இன்று தமிழகம் மென்பொருள் மூலம் பல்லாயிரம் கோடி சம்பாதிக்கிறது. ஏற்றுமதி மூலம் ஏகமாய்ச் சம்பாதிக்கிறது. விளைநிலத்தில் என்ன பெரிதாய்க் கிடைத்துவிடப் போகிறது? மருத்துவரின் ஒரு கோணம் நியாயம். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சென்னையையும் திருவள்ளூரையும் ஒட்டியே ஏன் அமைய வேண்டும் என்று இவர் கேட்பது செம கொக்கி!

02 May 2008 ஜூனியர் கேளவி-பதில்
25 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
18 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
11 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
04 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
28 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
21 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
Related Post

Leave a Reply