Friday 25 April 2008
ஆன்மிக நெறியைப் போற்றுகிறவர்கள், ஆன்மிகத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று சொல்வதைவிடத் தங்களை இறைவனிடத்திலே
ஒப்படைத்துவிடுகிறவர்களாகவே இருக்கிறார்கள்.
மோட்டார் சைக்கிளில் ஒரு குடும்பம் செல்கிறது. கணவன் ஓட்ட, மனைவி ஒரு கையில் கணவனின் தோளைப் பிடித்துக்கொண்டு மறுகைக்குள் ஒரு பச்சைக்
குழந்தையை அரவணைத்தபடி செல்கிறாள்.
அந்தக் குழந்தை தன்னைக் கைவிட மாட்டாள் என்ற நம்பிக்கையில் தலையைத் தொங்கவிட்டபடி தூங்குகிறது. இதுதான் ஒப்படைத்தல் என்பது. என்னிடத்தில்
உன்னை ஒப்படைத்துவிட்டேன். நீ என்னைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பாய் என்று அக்குழந்தை மட்டுமா, கணவனின் தோளைப் பிடித்திருக்கும் அந்த மனைவியும்
மனப்பூர்வமாக நம்புகிறாள்.
நம்மை நம்பி இரு உயிர்கள்; நம் குடும்பம் இது; இவர்களைப் பத்திரமாக வீடு சேர்க்க வேண்டும் என்கிற நினைப்பு கணவனின் அக்கறை. அவனது பொறுப்பைக்
கூட்டுகிறது.
ஒப்படைத்தலின் பூரணத்துவம் இதுதான். உங்களை நம்பி நான்; நீங்கள்தாம் எனக்கு எல்லாம் என்று நம்மை நாம் தகுதி வாய்ந்தவர்களிடம் ஒப்படைக்கும்போது,
நம் செயல்பாடுகளில் உண்மையும் நேர்மையும் அர்ப்பணிப்பும் முழுமையும் உருவாகி வருகின்றன.
திருமணமான புதிதிலேயே, மஞ்சள் கயிற்றில் அழுக்கு ஏறுமுன்பே குடும்ப நீதிமன்றத்தின் படிகளில் ஏறுகிற தம்பதிகளும், இங்கே சில மாதம்; அங்கே சில
மாதம்; எங்கும் எதுவும் நிரந்தரமில்லை என்கிற மனப்போக்கும் உடைய சம்பளக்காரர்களும் பெருகிப் போனதற்கு இந்த ஒப்படைப்பு இல்லாததுதான் காரணம்.
கத்தியால் குத்த வருகிறான் கணவன். மனைவி பதறவில்லை. அலறி ஓடவில்லை; ஊரைக் கூட்டவில்லை. மனைவிக்கு அவனது உள்ளன்பு தெரியும். எனவே,
”என்னங்க இது! கத்தியை வச்சுக்கிட்டு என்ன விளையாட்டு இது?” என்கிறாள் சர்வசாதரணமாக!
ஒருவர் கேட்கலாம்; எதிராளியைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் எப்படி நம்மை ஒப்படைப்பது என்று? நான் சொல்கிறேன், நம் ஒப்படைப்புக் குணம்தான்
எதிராளியை மாற்றப் போகிறது. அவர் பொல்லாதவராக இருந்தாலும் சரி!
லேனாவின் முந்தைய ஒரு பக்கக் கட்டுரைகள்
2008/04/18 ‘இல்லை’களுக்குள் ஒளிந்துள்ள ‘ஆம்’கள்!
2008/04/11 ‘ஆம்’களுக்குள் ஒளிந்திருக்கும் ‘இல்லை’கள்‘
2008/04/04 வறுமையைச் சுட்டிக் காட்டுவதாவது?










































