Friday 25 April 2008

2008/04/25 Junior Kelvi Pathil
ஜூனியர் கேள்வி-பதில்- லேனா தமிழ்வாணன்

ஏ.கே.கன்னியப்பன், தேவக்கோட்டை

ராகுல்காந்தி அமைச்சர் பதவியை மறுத்தது உண்மையா?

உண்மைதான் அமைச்சர் பதவி என்பது எலிக்கு வால் போன்றது. கட்சிப்பதவி என்பது சிங்கத்தின் தலை போன்றது. ராகுல் கெட்டிக்காரராக இருக்கிறார். கட்சிப் பணியில் இருந்தால் அமைச்சர்கள் அனைவரும் இவர் கட்டு(ப்பாட்டிற்)க்குள். ஒரேயடியாக பிரதமர் பதவிக்குப் போய் விடுகிறேன், இடையில் ஏன் அமைச்சர் பதவி என்று சொல்லாமல் சொல்கிறாரோ?


ஆர்.பகவதி, நாகர்கோயில்.

சினிமாவில் ‘சென்சார்’ இருப்பது எதற்காக?

டீயை இவர்கள் குடித்துவிட்டு டீத்தூளை நம்மிடம் கொடுக்கிறார்கள். ஆனால் டீத்தூள் கூடச் செடிகளுக்கு (மக்கள்) ஒரு வகையில் ஊக்க உரம் என்பது அந்த (சென்சார்) விஞ்ஞானிகளுக்குத் தெரியாது. அதாவது சென்சாருக்குப் பிறகும் ஆபாசம் உள்ளது என்கிறேன்.


கே.அபிராமி, கரூர்.

உளவுத்துறைக்கே தெரியாதபடி வேலூர் தங்கக் கோவிலுக்கு வந்துபோன பிரியங்கா பற்றி?

பிரியங்காவின் இந்த வருகையால் ஓர் உண்மை புலனாகிறது. நம் உளவுத்துறையை யார் வேண்டுமானாலும் தூங்க வைக்கலாம் போலிருக்கிறது.


எஸ்.கமலம், விருத்தாச்சலம்.

பிரியங்கா வேலூர் சிறையில் நளினியைப் பார்த்தது பற்றி இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றனவே. நீங்கள் எந்தக் கட்சி?

தந்தையின் மரணத்திற்குக் காரணமானவர்களை வெட்டு! குத்து! கொல்லு! என்றுதான் திரையுலகம் காலம் காலமாகப் போதித்து வருகிறது! அரசியலோ, போய்ப்பார். கண்ணீர் சிந்து. உருக்கம் வரவழை. செய்ததும் நடந்ததும் தவறு என உரியவர்களுக்கு உணர்த்து என்று கற்றுத் தருகிறது. இந்த விஷயத்தில் நான் பிரியங்கா கட்சியே!


கே.முருகானந்தம், வேலூர்.

தற்காப்புக்காக கம்யூனிஸ்டுகளுக்கு எல்லா வகை ஆயுதங்களையும் இயக்கப் பயிற்சி தர வேண்டும் என்கிறாரே, இந்திய கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்?

இது நக்சல்களுக்கான நாற்றங்கால். இந்த நாற்றங்கால் முதலிலேயே தூர்க்கப்பட வேண்டும். இப்போதைய அரசு விழித்துத் கொள்ளாவிட்டால், இனி வரும் அரசுகள் எப்போதுமே விழிவிழி என விழிக்க வேண்டி வரும்.


ஆர்.எஸ்.சந்துரு, புதுவை-2.

திருவாரூர் மாவட்டம், கருவாக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘ப்ளஸ் டு’ புவியியல் தேர்விற்கு மாணவர்களைத் தேடித் தேடிப் பிடித்தார்களாமே?

பதினோராம் தேதி தேர்வு, பதின்மூன்றாம் தேதியில் நடப்பதாக நினைத்திருந்தார்களாம். அந்தத் தலைமையாசிரியருக்கே இந்த விவரம் தெரியாதாம். என்ன அக்கறை! மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் இப்படியொரு ஜல்லிக்கட்டு!


டி.அலைநாதன், முசிறி.

பேருந்துக் கட்டண உயர்வுப் பிரச்னையில் அமைச்சர் சொல்வது சரியா? அல்லது விஜயகாந்த் சொல்வது சரியா?

பேருந்தில் ஏறாமல், வெறும் இணையதளம், அரசாணை என்று போனால் அமைச்சர் சொல்வது சரி. பேருந்தில் ஏறிப் போனால், விஜயகாந்த் சொல்வது சரி. ஆக வருங்கால முதல்வர் சொல்வதுதான் சரியான உண்மை. இப்போது எங்கு போனாலும் நடக்க நடக்கத்தான் நல்லா இருக்கு!


அ.ஞானசேகர், தஞ்சாவூர்.

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அடுத்ததாகப் பெரிய விவசாயிகளுக்கும் கடனைத் தள்ளுபடி செய்யலாம் என்கிறாரே, சோனியா?

அப்படியே அம்பானி, விஜயமல்லையா போன்ற குழுமங்களையும் இதில் சேர்த்து விடலாமே? சோனியாஜி சொன்னால் மன்மோகன்ஜி என்ன மாட்டேன்னா சொல்லப் போகிறார்?


எஸ்.ஜாவித், பள்ளிப்பட்டி.

தங்கம் விலை ஏறியேறி இறங்குகிறதே?

தங்க மார்க்கெட்டும், பங்கு மார்க்கெட்டும் ஒன்று. ஆடு புலி ஆட்டம் தொடர்கிறது.


க.இருதயராஜ், புளியால்.

அடுத்தவர்களுடன் கடிதம் மூலம் உடனுக்குடன் நீங்கள் தொடர்பு கொள்வீர்களாமே?

அது முன்பு. இப்போது குறைந்துவிட்டது. அஞ்சல்துறை கூட அடிக்கடி இப்போது ‘ஹேங்’ ஆகிறது. எனவே, கடிதங்களுக்குப் பதில் இப்போது போன்தான்! இந்த ‘போன் தெரபி’ நேரத்தை நன்கு மிச்சப்படுத்துகிறது. கூடவே நேயர்களையும் உச்சப்படுத்துகிறது.


எஸ்.மணிகண்டன், காரைக்குடி.

தமிழக அரசியலில் இனி?

எளிமைக்கும் நேர்மைக்கும் முதலில் ஒரு கக்கன். அப்புறமாய் ஒரு க.ராசாராம். இப்படிச் சொல்ல இன்னோர் உதாரணம் கிடைக்கவில்லை.


வி.பாலாஜி, திருச்சி.

நடிகர் சோபன்பாவு மறைவு பற்றி?

இவரது இறுதி ஊர்வலத்தைத் காணநேர்ந்தபோது இன்னும் கூட மரியாதையாய் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு ஆளாகி, பின்பு ஒதுங்கி வாழந்த ஆந்திரப் பிரமுகர். யோகா செய்யும் போது இறந்தாரென்பது அந்த யாக வேள்விக்கே ஒரு கேள்வியாய் போய்விட்டது. யோகா, மரணம் விளைவிக்காது. மரணம் நிகழ்ந்த போதும் யோகாவில் இருந்தார் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.


பத்மாவதி வில்லியம், திருநெல்வேலி.

அரசியல் கெட்டுப் போனது ஏன்?

வெள்ளைச் சட்டைக்குள் வெள்ளை இதயம் இல்லாமல் போனதுதான் காரணம்.


டி.ரஜாக், மேட்டுப்பாளையம்.

நடிகைகளைக் கண்டு சபலப்படுவர்களைப் பற்றி?

காந்தக் கருவிழிகள், கண்ணாடிப் பேரழகு என்றாலே நம்மவர்களே கண்ணாடி மாதிரி உடைந்து போகிறார்கள். அப்புறம் உடைந்த கண்ணாடியில் எட்டுக்கோணல் முகங்கள். நடிகைகளைக் கல்யாணம் செய்து கொண்டவர்களை இவர்கள் அவசியம் பேட்டி எடுக்க வேண்டும்.


பி.எல்.ராமச்சந்திரன், கொடைக்கானல்.

கான்பூர் டெஸ்ட் ஆடுகளம் மோசமாக அமைந்தது ஏன் என்று உலக கிரிக்கெட் கவுன்சில் விளக்கம் கேட்டிருப்பது இந்தியாவைப் பாதிக்குமா?

அதிகபட்சமாக கான்பூரில் உலக அளவிலான ஆட்டங்களை நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று மட்டும் தடை விதிக்க முடியும். வேறு ஒன்றையும் அசைக்கக்கூட முடியாது. அந்தந்த நாடுகள் தம் ஆடுகளங்களைச் சாதகமான முறையில் அமைத்துக்கொள்ள உரிமை இருக்கிறது. இந்த வகையில் சென்னை பிட்ச் தயாரிப்பாளர்தான் நமக்கு ஏமாற்றம் தந்துவிட்டார். கான்பூர்காரர் படுவிழிப்பு. தென்னாப்பிரிக்காவைச் சுருட்டி எறிய நன்கு வழிவகுத்திருந்தார். இவ்விஷயத்தை ஊதி ஊதிப் பெரிதுபடுத்தப் பார்க்கும் ரோஷன் மகனாமா நிச்சயம் மூக்குடைப்படுவார்.


ஜே.தென்றல், வந்தவாசி.

புத்தகப் பதிப்புத் துறையில் பணிபுரிவோருக்குத் தனி நல வாரியம் உருவாக்கப்பட உள்ளது பற்றி?

கலைஞரின் இந்த அறிவிப்பால் புத்தக உலகம் மேலும் புத்துயிர் பெறும். சென்னை புத்தகக் கண்காட்சியில் அவர் ஒரு கோடி ரூபாய் அளித்த நாள் முதலே, புத்தக உலகிற்கு அவர் இன்னொரு உ.வே.சா.வாகவிட்டார்.


ஆ.ரெங்கராஜன், உடுமலைப்பேட்டை.

ஒரு படத்தின் வெற்றி தமக்கு முன்பே தெரியும் என்கிறாரே விஜய்?

ஆகா! அருமையான ஆற்றலாக இருக்கிறதே! இது தெரியாமல்தானே திரையுலகினர் பலர் நடுத்தெருவுக்கு வந்துவிடுகிறார்கள. படபூஜையின்போதே விஜய்யை வரவழைத்து ஜோசியம் சொல்லச் சொல்லி இப்படம் தேறுமா தேறாதா எனக் கேட்டு விஜய் முகம் சுழித்தால் அன்றே ஊற்றி மூடிவிட வேண்டும். எத்துணையோ தயாரிப்பாளர்களுக்குப் பல கோடிகள் மிச்சமாகும்!


டி.விக்டர், தூத்துக்குடி.

விலைவாசியைக் குறைக்க ப.சிதம்பரம் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?

என்னென்னவோ செய்து பார்க்கிறார். ஆனால் நடக்காது. விலைவாசி உயர்ந்தால் உயர்ந்ததுதான். இறங்கினாலும் அது பெரிதாக இராது. விலைவாசி உயர்ந்தால் உயர்ந்த பொருள்களை மக்கள் புறக்கணிக்கவோ, உபயோகத்தைக் குறைக்கவோ வேண்டும். இம்மந்திரம் தங்களிடம் இருப்பது தெரியாத நிலையில் நம் மக்கள். ஆனால் ஒன்று இரு பொருளாதார மேதைகள் நம் நாட்டை ஆண்டும் இந்த நிலைமை நம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடாது!


எம்.கோபால், கோவை-2.

தலைமைச் செயலர் திரிபாதியின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுவது பற்றி?

அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை. இலஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் தமக்கும் பிறருக்கும் இடையே நடக்கும் உரையாடல்களைப் பதிவு செய்யும் இயல்பு உள்ளவர். (எதிராளிக்குத் தெரியாமல் இப்படிச் செய்வது தவறு). இதை சி.டி. வடிவில் எப்படியோ வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். தொலைபேசி இலாகாவிற்கு இதனால் ஒரு பிரச்னையும் வராது. இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பாடுதான் திண்டாட்டம்.


முத்தையா பாஸ்கரன், காரைக்குடி.

கருணாநிதியை நவீன பகீரதன் என்று புகழ்கிறாரே ஸ்டாலின்?

ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் செயல்பட ஆரம்பிக்கும் தினத்தன்று நாமும் இப்புகழ்ச்சியில் சேர்ந்து கொள்வோம். அதுவரை எத்துணையோ ‘பகீர்’கள் காத்திருக்கின்றன.


எல்.வெங்கிட்டு, கரூர்.

சிவாஜியின் பேரன் நடித்தும் ‘சிங்கக்குட்டி’ படம் ஏன் ஓடவில்லை?

யாரேனும் பி.எச்.டி. ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளலாம். வாரிசு என்பதற்காகவெல்லாம் தமிழக மக்கள் சீக்கிரத்தில் அங்கீகரித்து விடமாட்டார்கள் என்பது முதல் பாடம். சிறுசிறு வேடங்களில் தோன்றி மக்கள் மனத்தில் இடம்பிடித்து பிறகு நாயகனாகியிருக்கலாம் சிவாஜி. அவசரப்பட்டு விட்டார்கள்.


கே.சதீஷ், தூத்துக்குடி.

இன்று கலிங்கத்துப் பரணி யார் மீது பாடலாம்?

ஆயிரம் யானையை வென்றவர்கள் மீது தான் பரணி பாட முடியும். அந்த எண்ணிக்கையில் யானைகள் இல்லை. எனவே, ஆயிரம் ஆடு, மாடுகளைக் கொன்ற எல்லாக் கசாப்புக் கடைக்காரர்கள் மீதும் பாடலாம்!

18 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
11 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
4 April 2008 ஜூனியர் கேளவி-பதில்
28 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
21 March 2008 ஜூனியர் கேளவி-பதில்
Related Post

Leave a Reply